பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவும்: எஸ்.எம். கிருஷ்ணா உறுதி
கிளிநொச்சி: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
4 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நேற்று போரால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிக்கு சென்றார். அங்கு இந்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்டுள்ள 1,000 வீடுகளை அவர் ஈழத் தமிழர்களுக்கு வழங்கினார். இது தவிர 10,000 சைக்கிள்களும் வழங்கினார். இன்குபேட்டர் உள்பட ரூ.1.5 கோடி மதிப்புள்ள மருத்துவ கருவிகளை அவர் மாவட்ட மத்திய மருத்துவமனைக்கு வழங்கினார்.
இந்த மருத்துவமனையில் கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதி மக்கள் சிகிச்சை பெறுகின்றனர். கிளிநொச்சியில் போரின்போது சேதமடைந்த 79 பள்ளிகள் இந்திய அரசின் உதவியோடு புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு பள்ளியை கிருஷ்ணா திறந்து வைத்தார்.
அதன் பிறகு அவர் கூறியதாவது,
கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 1,000 வீடுகளுக்கு அடிக்கல் நாட்ட வந்தபோது இங்கு சாலைகளே இல்லை. ஆனால் தற்போது உங்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இடம் பெயர்ந்தோரின் நலவாழ்வு ஆகியவற்றுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்.
அதேபோன்று அதிகாரப்பகிர்வு விவகாரத்தில் அரசியல் ரீதியாக தீர்வு காண இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவும். இந்த திட்டங்களின் தொடர்ச்சியாக புதிய வீடுகள் கட்ட அல்லது சேதமடைந்த வீடுகளை புதுப்பிக்க பயனாளிகளுக்கு இந்தியா நேரடியாக நிதியுதவி அளிக்கும். அதற்கான பயனாளிகள் ஐ. நா. அமைப்புகளின் மூலம் கண்டறியப்படுவர். அந்த பயனாளிகள் தங்களுக்கென்று வங்கிக் கணக்கை துவங்கியவுடன் அதில் பணம் போடப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications