சங்கரன்கோவில்- கடும் பனிப்பொழிவால் மல்லிகை பூ விளைச்சல் பாதிப்பு
சங்கரன்கோவில் கடும் பனிப்பொழிவு காரணமாக சங்கரன்கோவில் பகுதியில் மல்லிகைப் பூ விளைச்சல் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
கேரள மாநிலத்திற்கு தென்மாவட்டங்களில் மதுரைக்கு அடுத்தபடியாக குமரி மாவட்டம் தோவாளை, சங்கரன்கோவில் ஆகிய இரு பகுதிகளிலிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களின் மூலம் பூ ஏற்றுமதி நடக்கிறது.
சங்கரன்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலர் சாகுபடியை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் மறறும் இருமாநில வியாபாரிகள் வாழ்க்கையை கழித்து வருகின்றனர்.
தற்போது கடும் பனி பொழிவு காரணமாக இப்பகுதியில் பூ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. அதிலும் மணக்கும் மல்லிகை பூ விளைச்சலும், பிச்சிபூ விளைச்சலும் வெகுவாக குறைந்துள்ளது.
ஒரு கிலோ மல்லிகைப் பூவின் விலை சங்கரன்கோவில் மார்கெட்டில் 2 ஆயிரம் ரூபாயாக உள்ளது. மல்லிகை பூவின் விலை அதிகரிப்பால் பூ விற்பனை மந்தமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. அதே சமயம் கேரள மாநிலத்தில் மல்லிகை பூ விலை ரூ.2500 முதல் 3000 ரூபாயாக உள்ளது. மல்லிகை பூ விளைச்சல் குறைந்துள்ளதால் இப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பனிப்பொழிவால் வரத்து குறைந்து, மல்லி உள்ளிட்ட பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பனிப்பொழிவு அதிகரித்ததால் உற்பத்தி குறைந்து இப்போது தினமும் குறைவான பூக்கள் தான் சராசரியாக வருகின்றன. தேவை அதிகமாக இருக்கிறது. வரத்து குறைவாக இருப்பதால் பூக்களின் விலை விண்ணை முட்டுகிறது.
ஒரு சேர் அதாவது 300 கிராம் கொண்ட தரமான மல்லி 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ மல்லி, 2000 ரூபாயை தாண்டிவிட்டதால் சில்லரை வியாபாரிகள் மல்லியை நுகர்ந்து பார்ப்பதற்கே தயங்குகின்றனர். அந்த அளவுக்கு விலை கொடுத்து சில்லரையில் விலை வைக்க முடியாது என்று கூறி நடையை கட்டிவிடுகின்றனர்.சில வியாபாரிகள் மட்டும் வாங்கி செல்கின்றனர்.
ஜாதி மல்லி ஒரு சேர் 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பட்டுரோஸ் விலையில் சற்று இறக்கம் காணப்படுகிறது. 100 கிராம் எடையுள்ள கனகாம்பரம் 60 ரூபாய்க்கு விற்றது. சாமந்தி அரை கிலோ கொண்ட ஒரு தட்டு 100 ரூபாயை தொட்டு விட்டது. சாதாரண நாட்களில் இது 10 முதல் 20 ரூபாய்க்கு விற்பனையாகும்.
பத்து ரூபாய்க்கு விற்கப்பட்ட அரளி பாக்கெட் 20 ரூபாயை தாண்டிவிட்டது. சில்லரை வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்றியமையாத தேவைக்கு மட்டுமே பூக்களை வாங்கி செல்கின்றனர்.
கொள்முதல் விலை உயரவில்லை அடக்க விலைக்கு கொடுத்தால் போதும் என்ற நிலையில் வியாபாரம் செய்து வருகிறோம். விலை ஏற்றம் கண்டு மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். விலை ஏற்றம் ஒருபுறம் இருந்தாலும் எடையும் சரிவர இருப்பதில்லை. 500 ரூபாய்க்கு மல்லி வாங்கி முழம் 30 ரூபாய்க்கு விற்றால் தான் கட்டுபடியாகும். அந்த விலைக்கு மக்கள் வாங்குவார்களா என, சந்தேகமாக இருக்கிறது.
உரம், இடுபொருள், பூச்சிக்கொல்லி மருந்து, ஆள் கூலி எல்லாம் உயர்ந்து விட்டது. பூக்களின் கொள்முதல் விலை தான் உயரவில்லை. முன்பண பிடித்தம், போக்குவரத்து செலவு உள்ளிட்ட செலவுகளை கழித்து பார்த்தால், விவசாயம் செய்வதா அல்லது நிலத்தை விற்றுவிட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று எண்ணத் தோன்றுகிறது என்கிறார்கள் பூ உற்பத்தியாளர்கள்.
மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ மல்லிப் பூ ரூ.2000-க்கு விற்பனையானது. இதுபோல சம்பங்கி ரூ.150, செவ்வந்தி ரூ.150, பட்டன்ரோஸ் ரூ.150, கோழிப் பூ ரூ.40, கேந்தி ரூ.30, மஞ்சகேந்தி ரூ.50, கொழுந்து ரூ.80, ரோஸ் ரூ.40-க்கும் விற்பனையானது.












Click it and Unblock the Notifications