கல்விச் சாலைகள் ஒருபோதும் வியாபாரக் கூடமாக இருக்கக் கூடாது-கலாம்
வடோதரா: கல்வி ஒருநாளும் வியாபாரப் பொருளாக இருக்க முடியாது என்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார் கல்வியை விற்க கல்விச்சாலைகள் ஒன்றும் வியாபாரக் கூடமும் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகவிழா, மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அப்துல்கலாம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
கல்வி கற்கும் முறையில் வேகமான முன்னேற்றம் காண சிறந்த தொழில்நுட்பங்களை கல்வி நிறுவனங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். கல்வியின் மூலம் மாணவர்களது திறமைகளை அதிகரித்தால் அது பிற்காலத்தில் அவர்களது வாழ்க்கைக்கும், தேச முன்னேற்றத்துக்கும் பயன் உள்ளதாக அமையும்.
அர்ப்பணிப்பு உணர்வு தேவை
மிகப் பெரிய கட்டடமோ, அதிக அளவிலான வசதிகளோ, பிரமாண்ட விளம்பரங்களோ தரமான கல்வியை அளிக்க முடியாது. விரும்பக்கூடியதாக அமைந்ததும், அர்ப்பணிப்பு உணர்வு உள்ள ஆசிரியர்களாலுமே தரமான கல்வியை அளிக்க முடியும்.
சிறந்த பாடத் திட்டம், சிறந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள்-மாணவர்கள்- ஆசிரியர்கள் இடையே இணக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் தொடக்க நிலையிலேயே கல்வி அளிக்கப்பட வேண்டும்.
தலைமைப் பண்பு
ஆராய்ச்சி மனப்பான்மை, புதுமை விரும்பல், நவீன தொழில்நுட்பத்தைக் கையாளும் திறன், தொழில்திறன் தலைமைப் பண்பு, நெறிமுறை சார்ந்த தலைமைப் பண்பு ஆகியவற்றை தொடக்கக் கல்வி நிலையிலேயே மாணவர்களுக்குப் புகட்ட வேண்டும்.
இந்த 5 குணங்களை வளர்த்தால் சுயக் கட்டுப்பாடுள்ள, வாழ்நாள் முழுவதும் கற்கும் ஆர்வமுள்ளவர்களாக மாணவர்களை உருவாக்க முடியும். இப்படிப்பட்டவர்களால் தனக்கு மேல் உள்ளவர்களை மதிக்கத் தெரியும் அதே நேரத்தில் பொருத்தமான வகையில் அவர்களிடம் கேள்வி எழுப்பவும் முடியும்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு மாணவரும் குறைந்தது 5 மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும். 2020-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க ஊழல், மக்களின் தர வீழ்ச்சி, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற சவால்களை வென்றாக வேண்டும் என்றும் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications