சென்னையில் கட்டிட விதிமீறல்களுக்கு என்ஜினியர்களே பொறுப்பு: மேயர் சைதை துரைசாமி
சென்னை: சென்னையில் இனி விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டால் அதற்கு என்ஜினியர்கள் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்த ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றது. சென்னை மேயர் சைதை துரைசாமி, மண்டல வாரியாக நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றார். வளசரவாக்கம், உள்ளகரம், ஆலந்தூர் உள்ளிட்ட 3 மண்டலங்களில் ஆய்வுப் பணிகள் முடிந்துள்ளது. சோழிங்கநல்லூர் மண்டலத்தில் ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றது.
ஆய்வுப் பணியி்ன் போது அந்தந்த பகுதியின் எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், மெட்ரோ வாட்டர், குடிசை மாற்று வாரியம், பொதுப் பணித்துறை, மாநகராட்சி துறைகள் உட்பட மொத்தம் 18 துறைகளை சேர்ந்த அதிகாரிகள், மேயருடன் கலந்து கொள்கின்றனர்.
புதிய கட்டிடங்கள் கட்டும் போது வரைபட அனுமதிக்கு ஏற்ப கட்டிடம் கட்டப்படுகின்றதா என்பதை என்ஜினியர்கள் தான் கண்காணிக்க வேண்டும். விதிமுறைகளை மீறி கட்டிடங்களை கட்டினால், என்ஜினியர்கள் தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
சென்னையில் உள்ள மின்சார வாரியம், மெட்ரோ வாட்டர் உட்பட அனைத்து அரசுத் துறையினரும் மாநகராட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு துறைகளின் தேவைகளை தெரிவித்தால், அதனை அரசிடம் இருந்து பெற்று தருகின்றேன். முதல்வர் ஜெயலலிதா விரும்பத்திற்கு ஏற்ப சுத்தமான நிர்வாகம் மற்றும் சுத்தமான சென்னை என்ற இலக்கை அடைய ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்.
வரி விதிப்பு முறைகளை ஆய்வு செய்து, அதிலுள்ள பல்வேறு முரண்பாடுகள் விரைவில் களையப்படும். அனைத்து அரசுத் துறை அதிகாரிகளும் மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க வேண்டும். மக்களை அலைக்கழிப்பது, காலதாமதப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications