மின் கட்டண உயர்வு குறித்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை மக்களிடம் கருத்து கேட்பு!
சென்னை: தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்காக சென்னை, கோவை, திருச்சி, மதுரையில் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.
இது தொடர்பாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்கள், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்பு 1-4-2012 முதற்கொண்டு அல்லது அதற்கு முன்பு நடைமுறைக்கு வருமாறு மின் கட்டணத்தை மாற்றியமைப்பதற்காக மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இந்த மனுக்கள் ஆணையத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு முறையே மி.ம.1/2011 மற்றும் மி.ம.2/2011 எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் குறித்த சிறப்பியல்புகள், முன்னணி பத்திரிகைகளில் 2-12-2011 அன்று வெளியிடப்பட்டுள்ளன.
பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்
இந்த மனுக்கள் குறித்து முடிவெடுப்பதன் பொருட்டு, ஆணையம், பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த உள்ளது. ஆர்வமுள்ளவர்கள், இந்த நாட்களில் தங்களுக்கு அருகில் உள்ள பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்கவிருக்கும் இடங்களில் ஆணையத்தின் முன்பு ஆஜராகி தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் இடங்களில் காலை 9.30 மணி முதல் 11 மணி வரை ஆர்வமுள்ளவர்கள் தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
கூட்டம் நடைபெறும் நாள் மற்றும் இடங்கள்:
30-1-2012 திங்கட்கிழமை அன்று, சென்னை ராஜாஅண்ணாமலை மன்றம், தமிழ் இசை சங்கத்தில் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை கூட்டம் நடைபெறுகிறது. 2-2-2012 வியாழக்கிழமை அன்று, கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலை அரங்கத்தில், காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை கூட்டம் நடைபெறுகிறது.
இதேபோல், 6-2-2012 திங்கட்கிழமை அன்று, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி, ஜுப்ளி பில்டிங்கில் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை கூட்டம் நடைபெறுகிறது. மேலும், 10-2-2012 வெள்ளிக்கிழமை அன்று, மதுரை மருத்துவக்கல்லூரி வளாகம், இந்திய மருத்துவ சங்க அரங்கத்தில், காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை கூட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications