சோதனை என்ற பெயரில் அவமதிப்பு: கூடங்குளம் அணுமின்நிலைய விஞ்ஞானிகள் போராட முடிவு
நெல்லை: சோதனை என்ற பெயரில் வருவாய் துறையினர் தங்களை அவமதிப்பாக கூறி கூடங்குளம் அணுமின்நிலைய விஞ்ஞானிகள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இந்திய அணுமின் கழக விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளின் ஆண்டு செயல்பாடுகளை மதிப்பீடும் கருத்தரங்கம் வீடியோ கான்பிரான்ஸ் மூலம் வியாழக்கிழமை இந்தியா முழுவதும் நடைபெற்றது. இதில் பங்கேற்க கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு அணு விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் 17 பேர் வந்தனர். அவர்களின் வாகனத்தை அணு உலை எதிர்ப்பாளர்கள் முற்றுக்கையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுக்கவில்லை.
இதையடுத்து விஞ்ஞானிகள் நெல்லை எஸ்பி, மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டனர். அவர்களும் சாதகமான பதிலை தெரிவிக்காததால் விஞ்ஞானிகள் விரக்தியடைந்தனர். பின்னர் மாவட்ட நிர்வாகத்திடம் போராடிய பின்னரே அணுமின்நிலையத்தினுள் செல்ல முடிந்தது.
அவமதிப்பு
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது, இந்திய முழுவதும் உள்ள அணு விஞ்ஞானிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர பயிற்சி தேர்வு நடைபெறும். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அணு விஞ்ஞானிகளை தேர்ந்தெடுத்து அவர்களின் செயல்பாடுகளை மதிப்பீட்டு வீடியோ கான்பிரான்ஸ் மூலம் தேர்வு நடைபெறும். சிறப்பாக பதில் அளிப்பவர்களுக்கு பதிவு உயர்வு வழங்கப்படும். வீடியோ கான்பிரான்ஸ் வசதி நாங்கள் தங்கியிருக்கும் குடியிருப்பில் இல்லாததால் அணு மின் நிலையத்துக்கு வந்தோம். ஆனால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பொதுவாக விஞ்ஞானிகளை எந்த நாடும் கவுரமாக மதிக்கும். ஆனால் எங்களை சாதாரண விஏஓ, ஆர்ஐக்கள் பேட்ஜை பார்க்கிறோம் என்ற சாக்கில் சட்டையை பிடித்து இழுத்து சோதிக்கின்றனர். இச்செயல் எங்களை புண்படுத்துக்கிறது. சுருக்கமாக சொன்னால் வருவாய்துறையினர் எங்களை கேவலமாக நடத்துக்கின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஓத்துழைப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இதுகுறித்து அணு மின் விஞ்ஞானிகள் சங்க கூட்டத்தில் ஆலோசித்தோம். விரைவில் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications