பிப். 17ல் பத்மநாப சுவாமி கோயில் பொக்கிஷம் மதிப்பிடும் பணி துவக்கம்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி வரும் பிப்ரவரி மாதம் 17ம் தேதி துவங்கும் என்று மதிப்பீட்டு குழு தலைவர் வேலாயுதன் நாயர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் ஏற்கனவே திறக்கப்பட்ட 5 ரகசிய அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதற்காக தேசிய அருட்காட்சியக இயக்குனராக இருந்த ஆனந்தபோஸ் தலைமையில் ஒரு மதிப்பீட்டு குழுவும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தேசிய அருட்காட்சியக இயக்குனர் பதவியில் இருந்து ஆனந்தபோஸ் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைவராக மதிப்பீட்டு குழுவில் உள்ள வேலாயுதன் நாயரை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்நிலையில் வேலாயுதன் நாயர் தலைமையில் முதல் ஆலோசனை கூட்டம் நேற்று பத்மநாப சுவாமி கோயில் அருகே உள்ள ரங்க விலாசம் அரண்மனையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் மதிப்பீட்டு குழுவில் இடம் பெற்றுள்ள தேசிய தொல்பொருள் துறை பாதுகாப்பு பிரிவு இயக்குனர் நம்பி ராஜன், ரிசர்வ் வங்கி பிரதிநிதி விகாஸ் சர்மா, பத்மநாப சுவாமி கோயில் நிர்வாக அதிகாரி ஹரிகுமார், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எஸ். கிருஷ்ணா, கேரள அரசி்ன் கூடுதல் தலைமை செயலாளர் ஜெயகுமார் மற்றும் திருவிதாங்கூர் மன்னர் குடும்ப பிரதிநிதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பின்னர் வேலாயுதன் நாயர் கூறியதாவது,
பத்மநாப சுவாமி கோயில் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணியை விரைவில் துவங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் செய்வது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மதிப்பீட்டு பணிகளுக்கான சில உபகரணங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் சில உபகரணங்கள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இந்த உபகரணங்கள் இன்னும் 1 வாரத்தில் வரும். அதன் பிறகு வரும் பிப்ரவரி மாதம் 17ம் தேதி மதி்ப்பீட்டு பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications