டேராடூனில் ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு: ஒருவர் கைது

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இன்று உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ராகுல் மீது ஷூ வீசினார். ஷூ வீசியவரை போலீசார் கைது செய்தனர். உத்தரகண்டில் வரும் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இது குறித்து ராகுல் கூறுகையில், என் மீது ஷூ வீசினால் நான் பயந்து ஓடிவிடுவேன் என்று யாராவது நினைத்தால் அது தவறு. இதற்கெல்லாம் நாம் அசந்துவிட மாட்டேன் என்றார்.
சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் உத்தர பிரதேச மாநிலத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் துத்தியில் கடந்த 21ம் தேதி நடந்த பேரணியில் ராகுல் கலந்து கொண்டார். அப்போது 2 இளைஞர்கள் ராகுலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கருப்புக் கொடி காட்டினர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த 2 பேரையும் நையப் புடைத்தனர். அதில் அஜய் குமார் சிங் என்ற யோகா குரு பாபா ராம்தேவின் ஆதரவாளரை போலீசார் கைது செய்தனர்.
கருப்புக் கொடி காட்டப்பட்டதற்கு 2 நாட்களுக்கு முன்பு தான் பந்தாவில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல் தனது பேச்சை பாதியிலேயே முடித்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருமாறு கூறி பேனர்கள் மற்றும் போஸ்டர்களை காண்பித்தது தான் பேச்சு பாதியில் முடிக்கப்பட்டதன் காரணம்.












Click it and Unblock the Notifications