சசிகலா கணவர் நடராஜனின் மச்சான் மகன் மீது கோவையில் நில மோசடி, கொலை மிரட்டல் புகார்
கோவை சசிகலாவின் கணவர் நடராஜனின் மச்சான் மகன் சரவணன் என்பவரும், அவருடன் மேலும் 2 பேரும் தனது நிலத்தை அபகரித்து விட்டதாகவும், அதைத் தட்டிக் கேட்டபோது மூன்று பேரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கோவை மாவட்ட பாஜக துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார்.
சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக ஆங்காங்கே வழக்குகள், பாயத் தொடங்கியுள்ளன. முதலில் சிக்கியவர் சசிகலாவின் தம்பி திவாகரன். நில மோசடி, கொலை மிரட்டல் தொடர்பாக சிக்கியுள்ள அவர் போலீஸ் பிடியிலிருந்து தப்ப தலைமறைவாகி விட்டார்.
இந்த நிலையில், சசிகலாவின் இன்னொரு உறவினர் மீது நில மோசடிப் புகார் எழுந்துள்ளது. சசிகலாவின் கணவர் நடராஜனின் மச்சானுடைய மகன் சரவணன். இவர் மீதும் மேலும் இருவர் மீதும் கோவை மாவட்ட பாஜக துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் என்பவர் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரில் எனக்கு பி.என்.பாளையத்தில் ரூ. 2கோடி மதிப்புள்ள நிலம் இருந்தது. இந்த நிலத்தை சரவணன் என்பவர் அபகரித்து விட்டார். இவர் சசிகலாவின் கணவர் நடராஜனின் மைத்துனர் மகன் ஆவார். இதை நான் தட்டிக் கேட்டபோது சரவணனும், மேலும் 2 பேரும் சேர்ந்து என்னை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்களிடமிருந்து என்னைப் பாதுகாப்பதோடு எனது நிலத்தையும் மீட்டுத் தர உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார் ராதாகிருஷ்ணன்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்படி நடந்தால் நடராஜனின் மச்சான் மகன் சரவணனும் தலைமறைவார் என்று தெரிகிறது.
ஏற்கனவே நடராஜனின் மச்சான் திவாகரன் மீது வழக்குப் பாய்ந்து அவர் தலைமறைவாகியுள்ள நிலையில் இன்னொரு மச்சானின் மகன் மீது புகார் பாய்ந்திருப்பது சசிகலா தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications