சேலம் அருகே ரூ.5 லட்சம் மதிப்புள்ள 121 ஈயக்கட்டிகள் பறிமுதல்: 2 பேர் கைது
சேலம்: சேலம் அருகே ரூ.5 லட்சம் மதிப்புள்ள 121 ஈயக்கட்டிகளை லாரியில் கடத்திய போது அதனை மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் மடக்கிப் பிடித்தார்.
சேலம் சீரகாபாடி தேசிய நெடுஞ்சாலை அருகே சேலம் நோக்கி லாரி ஒன்று அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் அந்த வழியாக காரில் வந்த மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் லாரியின் வேகத்தால் சந்தேகமடைந்து அதை மடக்கி நிறுத்தி, சோதனை நடத்தினார். அப்போது அதில் 30 அவல் மூட்டைகள் இருந்தது. இதனால் மேலும் சந்தேகமடைந்த அவர் லாரி முழுவதும் சோதனையிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் அந்த லாரியை முழுமையாக சோதனையிட்டதில் அவல் மூட்டைக்கு கீழே 121 ஈயக்கட்டிகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து லாரி டிரைவர் மனோகரன், கிளீனர் ரங்கநாதன் ஆகியோரைப் பிடித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அனுமதியின்றி 121 ஈயக்கட்டிகளை சேலம், செவ்வாய்ப்பேட்டைக்கு கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த ஈயக்கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.












Click it and Unblock the Notifications