சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மதிமுக போட்டி: டாக்டரை களமிறக்குவாரா வைகோ?
சங்கரன்கோவில்: சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் மதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சதன் திருமலைக்குமாருக்கு சீட் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடும் என வேலூரில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
இங்கு அதிமுக வேட்பாளராக முத்துச்செல்வி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அதிமுகவிற்கு போட்டியாக மதிமுக தனது வேட்பாளரை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் கேட்டு அதிமுகவில் பலர் மனுத்தாக்கல் செய்தனர். இதில் சீனியர்களும் அடக்கம். ஆனால் இளைஞர் பாசறையைச் சேர்ந்த நகராட்சி தலைவர் முத்துச்செல்வியை அதிமுக தலைமை வேட்பாளராக அறிவித்தது. இதற்கு முத்துச்செல்வியின் கல்வித் தகுதி தான் காரணம் என்று மதிமுகவினர் கருதுகின்றனர்.
முத்துச்செல்வி என்ஜினியர் என்பதால் அவருக்கு போட்டியாக டாக்டர் ஒருவர் களம் இறக்கப்படலாம் என்று மதிமுகவினர் கூறுகின்றனர். அந்த வகையில் பார்க்கும் போது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முன்னாள் வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. டாக்டர் சதன் திருமலைக்குமார் தான் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
அவர் பொதுமக்களிடமும், கட்சியினரிடமும் வேறுபாடு இல்லாமல் எளிமையாக பழகும் குணமும், அடித்தட்டு மக்களை எளிதில் கவரும் வண்ணம் பேசும் திறமையும் கொண்டவர் என்றும் மதிமுகவினர் தெரிவித்தனர்.
ஆனால் தேர்தலில் போட்டியிட திருமலைக்குமார் இதுவரை தலைமையிடம் மனு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியில் மதிமுக எம்.எல்.ஏ.க்கள் விலைக்கு வாங்கப்பட்ட போது, சொந்த வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்த போதும் 'விலை' போகாமல் தலைமைக்கு விசுவாசமாக இருந்த சதன் திருமலைக்குமாருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மனதில் நல்ல இடம் இருக்கிறது. இதனால் வைகோ கூறினால் மறுக்காமல் திருமலைக்குமார் தேர்தலில் நிற்பார் என்று அக்கட்சியினர் தெரிவித்தனர்.
சங்கரன்கோவில் சட்டசபைத் தொகுதியில் ஏற்கனவே மதிமுக சார்பில் போட்டியிட்ட அனுபவம் டாக்டர் சதன் திருமலைக்குமாருக்கு உள்ளது. இதனால் தொகுதி முழுவதும் நன்கு அறிமுகம் உள்ள அவருக்கு சீட் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் சங்கரன்கோவில் சுவாமி சன்னதியில் நேற்று மதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு அலுவலகம் முன் அமைக்கப்பட்டிருந்த கட்சிக் கொடியை அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் நிஜாம் ஏற்றினார். பின்னர் சதன் திருமலைக்குமார் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.












Click it and Unblock the Notifications