திவாகரனுக்கு முன்ஜாமீன் தர போலீஸ் எதிர்ப்பு- விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் தாலுகா, ரிஷியூர் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவரின் மனைவி கஸ்தூரிக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீடு, கைலாசநாதர் கோவில் நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறி 28-11-2011 அன்று இடிக்கப்பட்டது. சசிகலாவின் தம்பி திவாகரன் தூண்டுதலின் பேரில் வீடு இடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
மேலும் கஸ்தூரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து சமீபத்தில் திருவாரூர் மாவட்ட மத்திய குற்றப் பிரிவு போலீஸில் கஸ்தூரி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்து திவாகரன் வீட்டை முற்றுகையிட்டனர். ஆனால் அங்கு அவர் இல்லை, தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்ஜாமீன் வழங்கக் கோரி திவாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,
வீடு இடிக்கப்பட்ட சம்பவத்திற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நான் குற்றவாளியாக்கப்பட்டு இருக்கிறேன். மற்றபடி மேற்படி சம்பவத்திற்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பில்லை. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக போலீசார் என்னை துன்புறுத்துகின்றனர்.
எனது சமூகத்தில் எனக்குள்ள மதிப்பு, மரியாதையை குறைக்கும் வகையில் பொய் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. உள்நோக்கத்துடன் பொய் புகார் கொடுக்கப்பட்டிருப்பதால் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது திவாகரனுக்கு முன்ஜாமீன் வழங்க அரசுத் தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த வாரத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications