நடுக்கடலில் அராஜகம்: தமிழக மீனவர்களை விரட்டிய கடற்படை-குண்டு வீசிய இலங்கை மீனவர்கள்!

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் இவ்வளவு அநியாயங்கள் நடந்தும் கூட சாட்டிலைட், ரேடார் என சகல வசதிகளையும் கொண்ட இந்திய கடற்படையோ அல்லது கடலோரக் காவல் படையோ இதுகுறித்து கண்டு கொள்ளாமல் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், இந்தியாவைச் சேர்ந்த மீனவர்களைக் காக்க முயலாதது பெரும் வருத்தத்தையும், வேதனையையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரும், இலங்கையைச் சேர்ந்த மீனவர்களும் - இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பதுதான் வேதனையானது - தாக்கி வருகின்றனர். இதைத் தடுக்கவோ, தட்டிக் கேட்கவோ இந்திய அரசு முனைப்பான நடவடிக்கை எதையும் எடுக்காமல் வாயை மூடிக்கொண்டுள்ளது.
இதனால் திமிரெடுத்த இலங்கைக் கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கி அடித்து விரட்டி வருகின்றனர்.
நேற்று முன்தினம்தான் கற்களை வீசி தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை விரட்டியடித்தது. இந்த நிலையில் நேற்று இரவு இலங்கைக் கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் சேர்ந்து வெறித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
682 விசைப் படகுகளில் நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிகக்ச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கைக் கடற்படையினர் வந்தனர். தமிழக மீனவர்களை அவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடித்தனர்.
இதையடுத்து தப்பி வந்த மீனவர்களை திடீரென இலங்கை மீனவர்கள் சுற்றி வளைத்தனர். பின்னர் பெட்ரோல் குண்டுகளை வீசி தமிழக மீனவர்களைத் தாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் அங்கிருந்து தப்பி கரைக்கு வந்து சேர்ந்தனர்.
இலங்கை கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் இணைந்து நடத்திய இந்த வெறித்தனமான தாக்குதலால் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பதட்டமும், கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications