சாலைகளில் அதி வேகத்தில் வண்டி ஓட்டினால் ரூ.1000 அபராதம்: தமிழக அரசு
சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான அபராதத்தை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி அபாயகரமாக வண்டி ஓட்டுபவர்களிடம் இருந்து இரண்டாயிரம் ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி இரு சக்கர வாகனப் பதிவைப் புதுப்பிக்கத் தவறினால், முதன்முறை பிடிபடும் போது 100 ரூபாயும் அதற்கு அடுத்த ஒவ்வொரு முறையும் 300 ரூபாயும் வசூலிக்கப்படும்.
பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டினால் முதல் முறை 2 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்படும். இரு சக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்தால் 100 ரூபாயும், இரண்டாம் முறை அதே தவறுக்கு 300 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். அபாயகரமாக வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாயும், மீண்டும் அதே தவறு செய்தால் 2 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படும். அதிவேகமாக வாகனம் ஓட்டினால் 400 ரூபாயும், அடுத்தடுத்த தவறுகளுக்கு 1000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும்.
ஹெல்மெட் அவசியம்
ஹெல்மெட் இன்றி வாகனம் ஓட்டி முதன்முறை பிடிபட்டால் 100 ரூபாயும் அடுத்தடுத்த முறைகளில் 300 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படும். ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழ், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை காட்டத் தவறினால் 100 ரூபாயும், அடுத்தடுத்த முறைகளுக்கு 300 ரூபாயும் விதிக்கப்படும்.
இந்த புதிய உத்தரவு, சென்னை மாநகரில் வரும் 30ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications