குடியரசு தினம்- நெல்லை- தூத்துக்குடியில் 7,000 போலீசார் பாதுகாப்பு
நெல்லை: குடியரசு தினத்தையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குடியரசு தினத்தன்று ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத் துறை அனைத்து மாநிலங்களையும் எச்சரித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நெல்லை மாநகர கமிஷனர் கருணாசாகர், சரக டிஐஜி வரதராஜூ ஆகியோர் உத்தரவின் பேரில் எஸ்பிக்கள் விஜயேந்திர பிதாரி, தூத்துக்குடி ராஜேந்திரன், மாநகர துணை கமிஷனர் ஜெயபால் ஆகியோர் தலைமையில் மொத்தம் 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நெல்லை மாநகரில் 1,500 போலீசாரும், நெலலை மாவட்டத்தில் 3,000 போலீசாரும், தூத்துக்குடியில் 2,000 போலீசாரும், மணிமுத்தாறு பட்டாலியனைச் சேர்ந்த 500 போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கமாண்டோ மற்றும் விரைவு அதிரடிப்படையினரும் களம் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் புளியரை, கங்கைகொண்டான், காவல் கிணறு, பாளை கேடிசி நகர் மற்றும் மாநகரத்தி்ல் தாழையூத்து, மேலப்பாளையம், கருங்குளம், பாளை டக்கரம்மாள்புரம் சோதனைச்சாவடியில் போலீசார் வாகனங்களை 24 மணி நேரமும் சோதனையிட்டு வருகின்றனர். வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள், ஆற்றுப்பாலங்கள், ரயில்வே பாலங்கள், மார்கெட், பஸ் நிலைய பகுதிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தடை செய்யப்பட்ட அமைப்பினர், சந்தேகத்திற்கிடமான நபர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications