வீர வணக்க நாள்-இன்று மாலை காஞ்சிபுரத்தில் கருணாநிதி பேசுகிறார்
காஞ்சிபுரம்: திமுக சார்பில் இன்று மாலை காஞ்சிபுரத்தில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதையொட்டி காஞ்சிபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
கச்சபேஸ்வரர் கோவில் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலைஞர் பேசுகிறார். இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ. அன்பரசன் தலைமை தாங்குகிறார்.
காஞ்சீபுரத்துக்கு கருணாநிதி வருவதையொட்டி அவரை வரவேற்க மாவட்டச் செயலாளர் தா.மோ. அன்பரசன் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகளை செய்துள்ளார். சென்னை ஆலந்தூரில் இருந்து வழிநெடுக கொடி தோரணம் வரவேற்பு பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தா.மோ. அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காஞ்சீபுரத்தில் உரையாற்ற வரும் தலைவர் கலைஞர் இன்று மாலை 5 மணியளவில் சென்னையில் இருந்து கார் மூலம் வருகிறார். அவருக்கு காஞ்சி நகர எல்லையான அண்ணா நூற்றாண்டு நினைவுத்தூண் எதிரில் பொன்னேரி கரையில் காஞ்சி மாவட்ட சார்பில் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில், காஞ்சி மாவட்ட கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் அணி நிர்வாகிகள், முன்னோடிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.
வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். மாநாடு போல் இந்த பொதுக்கூட்டம் நடை பெறுவதால் கழக தோழர்கள் அனைவரும் அலை கடலென திரண்டு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.