தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே!
சென்னை: தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள், திமுகவின் அரசியல் அணுகுமுறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, எதிர்க்கட்சியாக செயல்படும் திமுக தனது அரசியல் வியூகங்களை மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் பின்பற்றிய அரசியல் பாணியை கடைபிடிக்க திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. விஜய் ஸ்டைலிலேயே மீட்டிங், அறிக்கை, ரோட் ஷோ என உதயநிதியின் பாலிடிக்ஸ் ஸ்டைலும் இருக்கும் என்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய காலகட்டத்தில் விஜய், தினசரி அரசியல் கருத்துக்களை வெளியிடும் வழக்கத்தை பின்பற்றவில்லை. அதற்கு பதிலாக வார இறுதிகளில் பொதுமக்களை சந்தித்தார். இது விமர்சனங்களை பெற்றாலும், மக்கள் அவர் வருகையை ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருந்தனர்.
தமிழக வெற்றிக் கழகம்
மேலும், மாதத்துக்கு ஒரு முறை ஒரு நிகழ்ச்சி, மிக சிறிய அளவிலான சுற்றுப்பயணங்கள் மற்றும் அவ்வப்போது முக்கிய அரசியல் விவகாரங்களில் மட்டும் அறிக்கைகள் வெளியிடும் முறையை கடைபிடித்தார். அரசியல் களத்தில் அதிக சத்தம் இல்லாமல், திட்டமிட்ட நகர்வுகளை மட்டுமே மேற்கொண்ட அவர், தேர்தலில் எதிர்பாராத வெற்றியை பெற்றார். இந்த அணுகுமுறையே தற்போது திமுகவுக்குள்ளும் விவாதப் பொருளாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின்
அதன்படி, எதிர்க்கட்சி தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே முக்கிய கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முக்கிய அறிக்கைகள் மட்டுமே வெளியிடுவது போன்ற நடைமுறைகளை பின்பற்றலாம் என ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் விஜய்
சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய், திமுக மற்றும் அதன் தலைமையை கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால் அதற்கு நேரடியாக உதயநிதி பதிலளிக்கவில்லை. அதற்கு பதிலாக முன்னாள் எம்எல்ஏ எழிலன் மற்றும் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்கள் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டது. இதுவும் திமுகவின் புதிய அரசியல் அணுகுமுறையின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
உதயநிதி
எனினும், இந்த பாணி குறித்து கட்சிக்குள்ளேயே மாறுபட்ட கருத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. சில மூத்த நிர்வாகிகள், ஆளும் கட்சியை எதிர்கொள்ளும் நிலையில் எதிர்க்கட்சி தலைவர் நேரடியாக களத்தில் அதிகமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். முக்கிய அரசியல் விவகாரங்களில் உதயநிதி நேரடியாக கருத்து தெரிவிப்பது, மாவட்ட அளவிலான சுற்றுப்பயணங்களை மேற்கொள்வது, நிர்வாகிகளை சந்தித்து உற்சாகப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் அவசியம் என அவர்கள் கருதுகின்றனர்.
திமுக
குறிப்பாக தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவின் அடித்தள அமைப்புகளை மீண்டும் வலுப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும், அதற்காக எதிர்க்கட்சி தலைவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க வேண்டும் என்றும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. தினசரி அரசியல் விவகாரங்களில் கட்சியின் குரலாக செயல்படாமல் இருந்தால், அது மக்களிடையே எதிர்க்கட்சியின் தாக்கத்தை குறைக்கக்கூடும் என்ற அச்சமும் கட்சிக்குள் நிலவுவதாக கூறப்படுகிறது.
அரசியல் பாணி
மறுபுறம், அடிக்கடி அறிக்கைகள் வெளியிடுவதை விட தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய பிரச்சனைகளில் மட்டுமே கவனம் செலுத்தும் அரசியல் பாணி, மக்களிடம் அதிக கவனத்தை ஈர்க்கும் என்ற கருத்தும் ஒரு தரப்பில் உள்ளது. இதனால், உதயநிதியின் அரசியல் நடவடிக்கைகள் எந்த திசையில் நகரும் என்பது குறித்து திமுக வட்டாரங்களில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சியாக திமுக தனது அடுத்த கட்ட அரசியல் திட்டங்களை வடிவமைத்து வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் எந்த வகையான அரசியல் பாணியை தேர்வு செய்கிறார் என்பதை திமுகவினர் ஆர்வத்துடன் எதிர்நோக்கி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications