இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை தீர அப்துல் கலாம் சொன்ன யோசனை!

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினை மிக மோசமான ஒன்றாக உள்ளது. கடலில் மீன்பிடிக்கச் செல்லும் இந்திய தமிழ் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது ஒரு பக்கம் என்றால், இந்த மீனவர்கள் ஆழ்கடலுக்குள் வந்து மீன் பிடிப்பதை இலங்கை மீனவர்களும் எதிர்க்கவே செய்கிறார்கள். இந்தியத் தமிழர்களுக்கு பாத்தியதை உள்ள கச்சத் தீவு பகுதிகளுக்கும் போக முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில் மீனவர்களின் பிரச்சினையைத் தீர்க்க முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் புதிய யோசனை ஒன்றை கூறியுள்ளார்.
நான்கு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள கலாம், புதன்கிழமை இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்துப் பேசினார்.
அப்போது இலங்கை தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்த பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து கலாம் விவாதித்தார்.
பின்னர் அவர் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க கலாம் சில யோசனைகளை தெரிவித்தார்.
வாரத்தின் ஏழு நாட்களில் மூன்று நாட்கள் இலங்கை மீனவர்களும்,மற்றொரு மூன்று நாட்கள் தமிழக மீனவர்களும் மீன் பிடித்துக் கொள்ள வேண்டும்.ஒரு நாள் இரு தரப்பினருமே மீன் பிடிக்க செல்லாமல் ஓய்வுக்கு ஒதுக்கிவிடவேண்டும்.
அதே சமயம் மீன் பிடிக்கச் செல்லும்போது இரு தரப்பு மீனவர்களுமே மீன்வளம் இருக்கும் இடத்திற்குச் செல்ல எல்லையை தாண்டலாம். இதில் இலங்கை கடற்படை தலையிடக்கூடாது.
ஐரோப்பாவில் உள்ள ஒரு சிறிய நாட்டில் மீனவர் ஒருவரின் தனி நபர் ஆண்டு வருவாய் 40,000 அமெரிக்க டாலர் ஆக உள்ளது. ஏனெனில் அவர்கள் பரஸ்பர ஒப்பந்தத்துடன் ஆழ் கடலுக்குள் சென்று மீன் பிடிக்கின்றனர்.
அதே சமயம் இலங்கை மீனவர்களின் தனி நபர் ஆண்டு வருமானம் 3000 டாலர்களாகவும், இந்திய மீனவர்களின் ஆண்டு வருமானம் 2000 டாலராகவும் உள்ளது.
எனவே இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் ஆழ் கடலுக்குள் சென்று மீன் பிடித்தால், அவர்களது வருமானமும் அதிகரிக்கும் என்று கலாம் யோசனை தெரிவித்தார்.
தனது யோசனையை கருத்தில் கொண்டு இரு நாடு அரசுகளும் செயல்பட்டால், மீனவர்கள் பிரச்னை நீங்கும் என்று கலாம் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்பார்களா இலங்கைக்காரர்கள்?
ஆனால் கலாமின் இந்த யோசனையின் சாதக, பாதகங்கள் மீனவர்களுக்குதான் தெரியும். மூன்று நாட்கள் என்றால் ஒரு நாள்விட்டு ஒருநாள் செல்ல வேண்டியிருக்கும். இதனை மீனவர்கள் எந்த அளவு ஏற்பார்கள் என்ற கேள்வி உள்ளது. அத்துடன் இந்த யோசனையை இந்தியா தரப்பில் ஏற்றுக்கொண்டாலும், இலங்கை ஏற்றுக்கொள்ளுமா என்ற சந்தேகமும் உள்ளது. இதுகுறித்து இலங்கை இதுவரை தனது கருத்தைத் தெரிவிக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications