தமிழக அணைகளைப் பராமரிக்க ரூ. 745 கோடி-அன்று திமுக சொன்ன திட்டமா?

ஆனால் இதே திட்டத்தை கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்துத அமைச்சர் கே.வி.ராமலிங்கம் இன்று கூறுகையில், தமிழகத்தில் உள்ள அணைகளைப் பராமரிக்க ரூ. 745 கோடி நிதி செலவிடப்படவுள்ளது. இதற்கு உலக வங்கி நிதியுதவி செய்யவுள்ளது. மேலும் புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக்கும் திட்டம் முதல் கட்டமாக ரூ. 27 கோடி செலவில் நடைபெறும். இதற்கான ஒப்பந்தப் பணிகள் விரைவில் முடிவடையும் என்று கூறினார்.
ஆனால் அணைகள் பராமரிப்பு திட்டம் என்பது கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது போலத் தெரிகிறது. இதுதொடர்பாக 21.11.2010 அன்று அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது...
தமிழ்நாட்டில் உள்ள அணைகளை 745 கோடியே 49 லட்சம் ரூபாய் உலக வங்கி நிதி யுதவியுடன் சீரமைக்கவும், மேம்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை அடுத்த நிதி ஆண்டிலிருந்து 6 ஆண்டுகளில் படிப்படியாகச் செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், பொதுப்பணித் துறை - நீர்வள ஆதாரத் துறையின் கீழ் உள்ள 66 அணைகளையும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 38 அணைகளையும் புனரமைப்பு செய்து மேம்படுத்துதல் தொடர்பான திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் 11 உறுப்பினர்களைக் கொண்ட உயர் நிலைக் குழு ஒன்றினை அமைத்து முதலமைச்சர் நேற்று உத்தரவிட்டார் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த திட்டத்தின்கீழ், தமிழகத்தில் உள்ள 104 அணைகளும் முழுவதுமாக பழுதுபார்க்கப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 12 அணைகளும், மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 6 அணைகளும் பழுதுபார்க்கப்பட உள்ளன.
சென்னை மண்டலத்தில், திண்டிவனம் அருகே உள்ள வீடூர் அணை, கல்லக்குறிச்சி அடுத்துள்ள கோமுகி அணை, காட்பாடியை அருகே உள்ள ராஜா தோப்பு அணை, குடியாத்தம் அடுத்துள்ள மோர்தானா அணை ஆகியவை பழுதுநீக்கப்பட உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் 6 அணைகள், திருச்சி மண்டலத்தில் சிட்டமல்லி அணை, வேடசந்தூர் அருகே உள்ள கொடனாறு அணையும் சீரமைக்கப் படுகின்றன. மதுரை மண்டலத்தில், தென்காசி அருகே உள்ள அடவிநாயனார் கோவில் அணை, நாங்குனேரி அருகே உள்ள வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, வள்ளியூர் அருகே உள்ள பொய்கை ஆறு, மணிமுத்தாறு, நம்பியாறு அணை ஆகியவற்றிலும் பழுதுநீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
கடந்த திமுக ஆட்சியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டத்தை தற்போது மீண்டும் அதிமுக ஆட்சியில் புதிய திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சலசலப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications