ஒரிசா பழங்குடி மக்களை சந்திக்க வருகிறது கட்டுப்பாடுகள்

ஒரிசா மாநிலத்தின் தென்பகுதியில் மல்காங்கிரி, ராயகடா, கோரபுட், கலாண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் அழிவின் விளிம்பில் இருக்கும் பழங்குடி இனக் குழுக்கள் இன்றும் வாழ்கின்றனர்.
கொதவா, பரஜா போன்ற பல பழங்குடிகளின் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் டோங்ரியா கோந்த், போண்டோ போன்ற இனமக்கள் இன்னமும் ஆதி வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர்.
போண்டோ இனம் இதில் மிகவும் தனித்துவமானது. மாவோயிஸ்டுகளின் ஆதிக்கமுள்ள மல்காங்கிரி மாவட்டத்தில் போண்டோ ஹில்ஸ் என அழைக்கப்படும் மலைக்குன்றில் வசித்து வருகின்றனர். போண்டோ ஆண்கள் நம்மைப் போல் இயல்பு வாழ்க்கைக்கு பழக்கப்பட்டுவிட்டாலும் பெண்கள் இன்னமும் அரை நிர்வாணிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.
தலைமுடியை மழித்தும் கழுத்து நிறைய பெரும் இரும்பு வளையங்களை அணிந்தும் மேலாடைக்குப் பதிலாக சணல் மற்றும் பாசிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒருவகை ஆடையையும் அணிந்தே வாழ்கின்றனர்.
இப்படி வாழும் பழங்குடி மக்களை முன் வைத்து ஒரிசாவில் சுற்றுலா வர்த்தகமும் களைகட்டி வருகிறது. "எத்னோ டூரிஸம்" என்றழைக்கப்படும் இந்த சுற்றுலா வர்த்தகம் பழங்குடிகளை காட்சிப் பொருளாக்கி வியாபாரமாக்குகிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இதையடுத்து ஒரிசாவின் பழங்குடி மக்கள் கிராமங்களுக்கு வெளிநாட்டவரை அழைத்துச் செல்வதற்கு புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து பழங்குடி கிராமங்களுக்கு செல்லும் வெளிநாட்டவர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்டவைகளை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக சுற்றுலா முகவர்களுடன் மாவட்டங்களின் நிர்வாகங்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன.












Click it and Unblock the Notifications