ரோசய்யா உரையுடன் நாளை கூடுகிறது சட்டசபை
சென்னை: தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. ஆளுநர் ரோசய்யா உரை நிகழ்த்தவிருக்கிறார்.
14வது தமிழக சட்டசபையின் 3வது கூட்டத் தொடர் நாளை துவங்குகிறது. இந்த கூட்டம் காலை 10 மணிக்கு துவங்கும். இந்த ஆண்டில் நடக்கும் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் ரோசய்யா உரையாற்றுகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஆளுநராக பொறுப்பேற்ற ரோசய்யா முதல் முறையாக சட்டபசபையில் உரையாற்றுகிறார்.
கடந்த ஆண்டில் அரசு நிறைவேற்றிய திட்டங்கள், தற்போது நடந்துவரும் வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றும் புதிய அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம்பெறும் என்று கூறப்படுகின்றது.
ஆளுநர் தனது உரையில் கூடங்குளம் மற்றும் முல்லைப் பெரியாறு ஆகிய பிரச்சனைகளில் அரசின் அணுகுமுறைகள் குறித்தும், தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்தும், நிவாரணப் பணிகள் குறித்தும் குறிப்பிடுவார் என்று தெரிகிறது. முதல் நாள் கூட்டம் ஆளுநர் உரையுடன் முடிந்துவிடும்.
அதன் பிறகு சட்டசபையின் அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யும். இந்த கூட்டத் தொடர் ஒரு வாரம் நடக்கும் என்று தெரிகிறது. இதையடுத்து 2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாத துவகத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications