கோட்சேவை மடக்கி பிடித்த வீரரின் குடும்பம் வறுமையில் தவிப்பு!

1948 ஆம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி மகாத்மா காந்தியை டெல்லி பிர்லா மாளிகையில் நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றான். காந்தியை படுகொலை செய்துவிட்டு தப்பியோட முயன்ற கோட்சேவை தீரமுடன் மடக்கிப் பிடித்த வீரரின் பெயர் தேவ் ராஜ் சிங் தாகூர்.
1952-ம் ஆண்டு நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் கையால் வீரதீர செயலுக்கான விருதைப் பெற்றவர்.
இமாசலப்பிரதேசத்தின் நகான் நகரில் தாகூரின் குடும்பம் வசித்து வருகிறது. இந்திய விமானப் படையில் பணியாற்றி வந்த தாகூருக்கு மனநிலை பாதிக்கப்பட கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது. 14 ஆண்டுகாலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசர் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் 1987-ல் தாகூர் காலமானார்.
தாகூர் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பம் வறுமையோடு போராடி வருகிறது.
நாட்டின் தேசப்பிதாவை சுட்டுக் கொன்ற கோட்சேவை பிடித்துக் கொடுத்த வீரர் என்ற அடிப்படையில் அரசுப் பணிக்காக இமாசலப்பிரதேச அரசிடம் அவரது குடும்பம் நீண்டகாலமா கோரிக்கை விடுத்தாலும் நிறைவேறியபாடில்லை. இதுபோன்ற அடிப்படையில் எல்லாம் அரசுப் பணி வழங்க முடியாது என்பதில் இமாசலப்பிரதேச அரசு அதிகாரிகள் பிடிவாதம் காட்டுகின்றனர்.
ஆண்டுதோறும் ஜனவரி 30-ந் தேதி மகாத்மாவை நினைவுகூறும் நமக்கு கோட்சேவின் நினைவும் வராமல் போவது இல்லை... இருவரது பெயரும் வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதை போல தேவ்ராஜ்சிங் தாகூரின் பெயரும் இடம்பெற வேண்டும்.












Click it and Unblock the Notifications