''காஷ்மீரில் ஒரு கல்யாணசுந்தரம்'': மகனுக்காக ஆசிரியரையே தேர்வு எழுத வைத்தாரா அமைச்சர்?!
ஸ்ரீநகர்: மூத்த காங்கிரஸ் தலைவரும், ஜம்மு காஷ்மீர் மாநில கல்வியமைச்சருமான பீர்சாதா சயீதின் மகன் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதியபோது பாதித் தேர்வை கல்வி அதிகாரி ஒருவர் எழுதியுள்ளார் என்று கிரேட்டர் காஷ்மீர் என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில கல்வியமைச்சராக இருப்பவர் காங்கிரஸ் மூத்த தலைவர் பீர்சாதா சயீத். அவரது மகன் கடந்த 2009ம் ஆண்டு பிளஸ் தேர்வு எழுதினார். அப்போது உருது பரீட்சையின்போது அவர் எழுதிய அறையில் பணியில் இருந்த கல்வி அதிகாரி பாதி வினாக்களுக்கு விடை எழுதிக் கொடுத்துள்ளார். தற்போது கிரேட்டர் காஷ்மீர் என்ற நாளிதழ் அந்த வினாத்தாளின் நகலை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
228211 என்ற எண் கொண்ட அந்த வினாத்தாளில் இரண்டு கையெழுத்துகள் உள்ளன. அமைச்சர் மகன் தேர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக அந்த அதிகாரி பாதித் தேர்வை எழுதிக் கொடுத்துள்ளார். இது குறித்து அதே மையத்தில் பணியில் இருந்த மற்றொரு ஆசிரியர் அம்மாநில பள்ளித் தேர்வுகள் ஆணையத்திடம் புகார் கொடுத்தும் பலனில்லை. முடிவுகளை நிறுத்திவைக்காமல் அமைச்சரின் மகன் தேர்ச்சியடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் அமைச்சர் சயீதின் பதவிக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த 2010ம் ஆண்டு மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் ஜிஎம் சரூரின் மகளுக்கு பதில் வேறு ஒரு நபரை மருத்துவ நுழைவுத் தேர்வை எழுத்த வைத்த விவகாரம் வெளியே வந்தபோது அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications