திவாகரன் சொல்லித்தான் ரிஷியூரில் வீட்டை இடித்தோம்-பொக்லைன் உரிமையாளர் வாக்குமூலம்
திருவாரூர்: சசிகலாவின் தம்பியான திவாகரன் சொல்லித்தான் கஸ்தூரியின் வீட்டை இடித்தோம் என்று பொக்லைன் உரிமையாளர் சங்கர் என்பவர் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் ரிஷியூர் கீழத்தெருவை சேர்ந்த பாலசுப்ரமணியனின் தொகுப்பு வீடு மற்றும் அவரது தந்தை மாணிக்கத்தின் வீடு ஆகியவை, திவாகரனின் தூண்டுதலின்பேரில் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் இடித்து தள்ளப்பட்டதாக பாலசுப்ரமணியத்தின் மனைவி கஸ்தூரி கடந்த 21ம் தேதி திருவாரூர் எஸ்பி சேவியர் தன்ராஜிடம் புகார் மனு அளித்தார்.
அதன்பேரில், போலீசார் சசிகலா தம்பி திவாகரன், ரிஷியூர் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமேனன், அதிமுக பிரமுகர்கள் தமிழ்ச்செல்வன், குணசேகரன், தியநாதன், கணேசன், ராஜேந்திரன் உள்பட 9 பேரை தேடிவருகின்றனர்.
இதில் முதல் கட்டமாக பொக்லைன் உரிமையாளர் சங்கர், டிரைவர் சக்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீஸ் விசாரணையின் போது, திவாகரன் உத்தரவின்பேரில்தான் ரிஷியூர் பாலசுப்ரமணியத்தின் வீடு மற்றும் அவரது தந்தை மாணிக்கத்தின் வீடுகளை பொக்லைன் உதவியுடன் இடித்து தள்ளினோம். வீட்டை இடிக்கும்போது ரிஷியூர் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமேனன், அதிமுக பிரமுகர்கள் தமிழ்ச்செல்வம், குணசேகரன், வைத்தியநாதன், கணேசன், ராஜேந்திரன் ஆகியோர் கடப்பாரை மற்றும் அரிவாளுடன் அங்கு இருந்தனர் என்று சங்கர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதை வைத்து திவாகரனுக்கு எதிரான பிடியை போலீஸார் இறுக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.