சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது, புயல் நிவாரணத்தில் மெத்தனம்-சட்டசபையில் திமுக வெளிநடப்பு
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. தானே புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலும், நிவாரண உதவிகளை வழங்குவதிலும் மெத்தனம் காட்டி வருகிறது தமிழக அரசு என்று கூறி சட்டசபையில் இன்று திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
சட்டசபை இன்று காலை கூடி, ஆளுநர் தனது உரையை வாசிக்கத் தொடங்கியதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேச ஆரம்பித்தார். இதையடுத்து ஸ்டாலினைப் பார்த்த ஆளுநர், உங்களது கருத்துக்களை அவையில் விவாதித்து தெரிவியுங்கள் என்றார். இருப்பினும் அதை ஸ்டாலின் பொருட்படுத்தவில்லை. இதையடுத்து ஆளுநரும் தனது உரையைத் தொடர ஆரம்பித்தார்.
ஸ்டாலின் தொடர்ந்து பேசுவதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல ஆளுநர் உரையை வரவேற்று மேசைகளைத் தட்டியபடி இருந்தனர். பின்னர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்புச் செய்தனர்.
வெளியில் வந்த ஸ்டாலின் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த ஆட்சி பொறுப்பேற்ற 3 மாத காலத்தில் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகை மாவட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் முறையாக வழங்கப்படவில்லை.
சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து கொலை, கொள்ளை, துப்பாக்கி சூடு நடப்பதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் வாழும் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
விலைவாசி உயர்வால் பாதிக்கப்படும் மக்கள் இந்த அரசு அறிவித்துள்ள பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின் வெட்டு காரணமாக தொழில், விவசாயம், வியாபாரம் பாதிக்கப்பட்டதோடு பள்ளி குழந்தைகள் படிக்க முடியாத அளவுக்கு மின் வெட்டு உள்ளது.
தி.மு.க. ஆட்சியில் தமிழ் மொழிக்கு செம்மொழி, அங்கீகாரம் பெற்றதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் சீர்குலைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலகம் தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டது என்ற காரணத்துக்காக அதில் தலைமைச் செயலகத்தை செயல்பட விடாமல் தன்னுடைய அரசியல் காழ்ப்புணர்ச்சியை இந்த அரசு வெளிப்படுத்துகிறது.
இதே போல் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற எடுத்துள்ள இந்த அரசின் முடிவு மக்கள் விரோத போக்கை காட்டுகிறது.
அரசியல் கட்சி தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மீது பழி வாங்கும் நோக்குடன் வழக்குப்பதிவு செய்து சிலரை குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைப்பது போன்ற பழி வாங்கும் நோக்கத்தோடு இந்த அரசு செயல்படுகிறது.
அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மாற்றத்தால் நிர்வாகம் முடங்கி விட்டது. அரசு அறிவிக்கும் திட்டங்கள் ஏட்டளவில்தான் உள்ளதே தவிர எந்த திட்டங்களும் முழுமையாக மக்களை சென்றடையவில்லை. எனவே இந்த அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து கவர்னர் உரையை புறக்கணித்து தி.மு.க. வெளிநடப்பு செய்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications