சாதிச் சண்டையை தூண்டிவிட்டுள்ளார் சிரஞ்சீவி: எம்ஆர்பிஎஸ் தலைவர் குற்றச்சாட்டு
ஹைதராபாத்: நடிகரும், காங்கிரஸ்காரருமான சிரஞ்சீவியின் தூண்டுதலால் தான் ஆந்திர மாநிலம் அமலாபுரத்தில் உள்ள அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது என்று மாதிகா இடஒதுக்கீடு போராட்ட சமிதியின் தலைவர் கிருஷ்ண மாதிகா குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திர மாநிலம் அமலாபுரத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை விஷமிகள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைத்தனர். இதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த மாதிகா இடஒதுக்கீடு போராட்ட சமிதியின் தலைவர் கிருஷ்ண மாதிகா தலைமையில் போராட்டம் நடந்தது.
இந்நிலையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பல்வேறு இடங்களில் உள்ள அம்பேத்கர் சிலைகள் உடைக்கப்பட்டதற்கு சிரஞ்சீவி தான் காரணம். அவர் மாநிலத்தில் சாதிச் சண்டையைத் தூண்டிவிட்டுள்ளார். அதன் விளைவாக உயர் சாதி மக்கள்
அம்பேத்கர் சிலைகளை உடைக்கின்றனர். எனவே, இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இது குறித்து உரிய விசாரணை நடத்த உயர் நீதிமன்றமும் உத்தரவிட வேண்டும் என்றார்.