ஈவ் டீஸிங்: டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் சூறை!
டெல்லி: மேற்கு டெல்லியில் உள்ள திலக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 2 பேர் ஒரு பெண்ணைக் கிண்டல் செய்து, அவரது வருங்காலக் கணவரை தாக்கியதால் அவர்களின் உறவினர்கள் ரயில் நிலையத்தை தாக்கினர்.
மேற்கு டெல்லியில் உள்ள திலக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று இரவு 2 ஆண்கள் அங்கிருந்த ஒரு பெண்ணைக் கிண்டல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் வருங்கால கணவர் ரவிந்தர் சிங் அவர்களைத் தட்டிக் கேட்டுள்ளார். கிண்டல் செய்ததும் இல்லாமல் தட்டிக் கேட்க வந்தவரை அந்த இருவரும் சேர்ந்து புரட்டி எடுத்துள்ளனர். இத்தனை நடந்தும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது.
இது குறித்து தகவல் அறிந்ததும் அந்த பெண் மற்றும் அவரது வருங்கால கணவரின் உறவினர் பாதுகாப்பு படையினரின் அலட்சியத்தை கண்டித்து மெட்ரோ ரயில் நிலையத்தை தாக்கினர். அங்கிருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதற்கிடையே கிண்டலடித்த அந்த 2 பேரும் ரயில் நிலையத்தில் இருந்து சென்றுவிட்டனர். அந்த 2 பேரும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு லஞ்சம் கொடுத்து தான் தப்பியிருக்க வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அந்த 2 பேர் தாக்கியதில் காயமைடந்த ரவிந்தரை தீன் தயால் உபத்யாய் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டெல்லி போலீசாரும் ஒன்றும் செய்யவில்லை. அதற்கு காரணம் ரயில் நிலையப் பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஈடுபட்டிருப்பது தான்.












Click it and Unblock the Notifications