விடாமல் பேசிய ஜெ. அன்பழகன்-வெளியேற்றிய அவைக் காவலர்கள்!
சென்னை: தமிழக சட்டசபையில் திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் சபாநாயகர் கூறியும் விடாமல் தொடர்ந்து பேசியதால் அவரை அவைக் காவலர்கள் வெளியேற்றினர்.
நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அன்பழகன் பேசும் போது அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்தார். அவர் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், செந்தில் பாலாஜி ஆகியோர் உடனுக்குடன் பதிலளித்தார்கள்.
இதைத் தொடர்ந்து சபையில் காரசார விவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே சபையில் அவர் பேசுவதற்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது. இதையடுத்து அதிமுக உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகரனை பேசுவதற்கு சபாநாயகர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்தார்.
பிரபாகரனும் பேச ஆரம்பித்தார். ஆனாலும் அன்பழகன் இருக்கையில் அமராமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவருடைய நேரம் முடிந்து விட்டது என்றும், அவர் அமர வேண்டும் என்றும் சபாநாயகர் பலமுறை எடுத்துக் கூறினார்.
அப்படியும் அவர் அமராமல் ஆவேசமாக அரசுக்கு சவால் விடும் வகையில் பேசிக் கொண்டிருந்தார். அவர் இருக்கையில் அமராவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தும் அன்பழகன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து வேறு வழியின்றி சபாநாயகர் அவரை சபையிலிருந்து வெளியேற்றுமாறு மார்ஷல் மற்றும் அவைக்காவலர்களுக்கு உத்தரவிட்டார். மார்ஷலும் அவைக் காவலர்களும் சென்று அன்பழகனின் கைகளை பிடித்து வெளியேற்ற முற்பட்டபோது, அவர்களின் கையை உதறி விட்டு அன்பழகன் சபையிலிருந்து வெளியேறினார்.












Click it and Unblock the Notifications