மாஜி திமுக அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா, தந்தை வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு
ஈரோடு: முன்னாள் திமுக அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவின் வீடு, அவருக்குச் சொந்தமான கல்லூரி உள்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர். இதனால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் கைத்தறித்துறை அமைச்சராக இருந்தவர் என்.கே.கே.பி.ராஜா. அவர் மீது பெருந்துறையைச் சேர்ந்த சிவபாலன் தாக்கப்பட்ட வழக்கு மற்றும் ஆள் கடத்தல் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து திமுக அவரது அமைச்சர் பதவியைப் பறித்துக் கொண்டு, கட்சிப் பொறுப்பில் இருந்தும் நீக்கியது. இதற்கிடையே சிவபாலனைத் தாக்கிய வழக்கில் ராஜா விடுவிக்கப்பட்டார். மேலும் ஆள் கடத்தல் வழக்கில் ஜாமீன் பெற்றுள்ளார். சிவபாலன் தாக்கப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் அவருக்கு மீண்டும் கட்சி பொறுப்பு வழங்கப்பட்டது.
தற்போதும் ராஜா ஈரோடு மாவட்ட திமுக செயலாளராக உள்ளார். இந்நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பல திமுக முன்னாள் அமைச்சர்கள் நில அபகரிப்பு வழக்கில் கைதாகினர். அதில் என்.கே.கே.பி. ராஜாவும் ஒருவர். பெருந்துறையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கொடுத்த நில அபகரி்ப்பு புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவர் ஜாமீனில் விடுதலையானார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் ஈரோடு செல்வம் நகரில் உள்ள ராஜா வீட்டுக்கு வந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. முருகேசன் தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர். அவரது வீடு தவிர அவரது தந்தையும் முன்னாள் திமுக அமைச்சரும், தற்போது மாநில திமுக விவசாய அணி தலைவருமான என்.கே.கே.பெரியசாமி வீடுகளிலும் சோதனை நடத்தினர்.
சோதனை நடந்தபோது ராஜா வீட்டில் இருந்தார். இது குறித்து தகவல் அறிந்த திமுகவினர் அவரது வீடு முன்பு கூடிவிட்டனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
அங்கு சோதனை நடந்த அதே நேரத்தில் கவுந்தப்பாடியில் உள்ள ராஜாவின் பூர்வீக வீட்டில் 4 லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டனர். அங்கும் ஏராளமான திமுகவினர் கூடிவிட்டனர்.
ஈரோடு காளிங்கராயன் பாளையத்தில் உள்ள ராஜாவின் உறவினரும், திமுக நிர்வாகியுமான மூர்த்தியின் வீட்டிலும் சோதனை நடந்தது. இது தவிர கவுந்தப்பாடி அருகே ராஜாவின் தந்தைக்கு சொந்தமான பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரிக்கு இன்று காலை 6 மணி அளவில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கும் சோதனை நடத்தினர். இதனால் கல்லூரி வளாகத்தில் பதட்டமான சூழல் நிலவியது. இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மேலும் ராஜாவின் நண்பர் சரவணன் வீட்டிலும், ஆப்பக்கூடலில் உள்ள என்.கே.கே.பெரியசாமியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. ராஜா வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக கிடைத்த புகாரின்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
என்.கே.கே.பி.ராஜா, அவரது தந்தை, உறவினர் வீடுகள் என்று ஒரே நேரத்தில் 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியுள்ளது ஈரோடு மாவட்ட திமுகவினரை அதிர்ச்சியடைய வைததுள்ளது.












Click it and Unblock the Notifications