+2 பிராக்டிகல் தேர்வின்போது பவர் கட் கூடவே கூடாது-கல்வித்துறை அறிவுரை
சென்னை: பிளஸ் டூ செய்முறைத் தேர்வின்போது மின் தடை ஏற்படாத வகையில் முன்னேற்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பு, செய்முறை தேர்வு வரும் 2-ம் தேதி தொடங்கி, 20ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்முறை தேர்வு தொடர்பாக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
தேர்வை சரியான நேரத்தில் தொடங்க வேண்டும். தேர்வின்போது கருவிகள் சரியாக செயல்படாவிட்டால், புறத் தேர்வாளர், அகத்தேர்வாளர் கருவிகளை சரி செய்து கொடுத்து அல்லது மாற்றிக்கொடுத்து, குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வை முடிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
தேர்வு நடைபெறும்போது, புறத்தேர்வாளர்கள் தேர்வறையை விட்டு வெளியே செல்லக்கூடாது. தேர்வு முடிந்தபின் விடைத்தாள்களை துல்லியமாகவும், கவனமாகவும் மதிப்பீடு செய்யப்படவேண்டும்.
புறத் தேர்வாளர் வழங்கும் மதிப்பெண் விவரங்களை எக்காரணம் கொண்டும் எவருக்கும் தெரிவிக்கக்கூடாது. புறத் தேர்வர்கள் மாணவ, மாணவிகளை கனிவுடன் நடத்த வேண்டும்.
தேர்வர்களை திட்டுவதோ, மனநிலை பாதிக்கும் விதத்தில் பேசுவதோ கூடாது. இயற்பியல் மற்றும் மின்சாரம் சார்ந்த செய்முறை தேர்வுகள் நடைபெறும் நாட்களில் மின்தடை ஏற்படாத வகையில், முன்கூட்டியே மின் வாரியத்துடன் தொடர்பு கொண்டு ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.
செல்போன்களை தேர்வு அறைக்கு எடுத்து செல்லக் கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications