தகுதியே இல்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன்- ஜெ.ஆவேசம்!

தமிழக சட்டசபையில் இன்று தேமுதிகவையும், அதன் தலைவர் விஜயகாந்த்தையும் கடுமையாக விமர்சித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். அவரது பேச்சின்போது தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுவதாக அவர் கோபத்துடன் கூறினார்.
முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க எனக்கு சற்றும் விருப்பமில்லை. ஆனால் அதிமுக தொண்டர்கள் அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று விரும்பியதால் அவர்களின் விருப்பப்படியே கூட்டணி வைத்தேன். எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் கூட கட்சியினரின் விருப்பத்தை மதித்துக் கூட்டணி வைத்தேன்.
ஆனால் தகுதியே இல்லாத அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்ததற்காக இப்போது நான் வெட்கப்படுகிறேன். விஜயகாந்த் இன்று சட்டசபையில் நடந்து கொண்டதைப் பார்க்கும்போது தகுதி இல்லாதவர்கள் அரசியலில் உயர் நிலையை எட்டினால் இப்படித்தான் ஆகும் என்பதைப் புரிந்து கொண்டேன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டசபையில் இன்று பேசிய பேச்சுக்கள் மிகவும் கீழ்த்தரமானது. சபையின் மாண்பை அவரது பேச்சு குலைத்து விட்டது
எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தில் இப்போது விஜயகாந்த் இருப்பதற்கும், அவரது கட்சி இந்த மாண்பு மிகுந்த சட்டசபைக்குள் நுழைவதற்கும் அதிமுகவும், அதன் தொண்டர்களும், எங்களது உழைப்பும்தான் காரணம் என்பதை அவர்கள் உணர வேண்டும். நாங்கள் இல்லாவிட்டால் உங்களுக்கு ஒரு சீட் கூட கிடைத்திருக்காது.
அதேசமயம் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்திருக்காவிட்டாலும் கூட அதிமுக அமோக வெற்றி பெற்றிருக்கும். காரணம், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள்.
ஆனால் அதிமுகவுடன் இணைந்ததால் தேமுதிகவுக்குத்தான் அதிர்ஷ்டம் அடித்தது. அந்தக் கட்சிக்கு 29 சீட்கள் கிடைத்தன. அக்கட்சிக்கு முதன்மை எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தும் கிடைத்தது.அத்தனைக்கும் காரணம் அதிமுகதான்.
ஆனால் இனிமேல் தேமுதிவுக்கு இறங்குமுகம்தான். அதை நான் திட்டவட்டமாக சொல்லிக் கொள்கிறேன் என்று கடுமையாக சாடினார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications