நீடாமங்கலம் காவல் நிலையத்தில் திவாகரன் மனைவி விசாரணைக்கு ஆஜர்

திருவாரூர் அருகே ரிஷியூரில் கஸ்தூரி என்பவருக்கு சொந்தமான வீட்டை திவாகரனும் அவரது ஆதரவாளர்களும் இடித்தனர் என்பது புகார்.
இப்புகாரின் பேரில் திவாகரனை கைது செய்ய போலீசார் முயற்சித்தனர். ஆனால் தப்பி ஓடி தலைமறைவான திவாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியிருந்தார். திவாகரனின் முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில் திவாகரனின் மனைவி ஹேமலதா, மகன் ஜெய் ஆனந்த், மகள் அம்மு ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு திருவாரூர் போலீஸார் சம்மன் அனுப்பினர்.
ரிஷியூர் வீடு இடிப்பு வழக்கு தொடர்பாக நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் மாலை 4 மணிக்குள் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பப்பட்டது.
இதையடுத்து ஹேமலதா நீடாமங்கலம் போலீஸ் நிலையம் சென்றார். அவரிடம் திவாகரன் பதுங்கி இருக்கும் இடம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டன. மேலும் ரிஷியூர் கஸ்தூரி வீடு இடிப்பு தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது.
நிர்வாண சாமியும் புகார்
இந்நிலையில் மன்னார்குடி சாமியார் மதுரை காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
திவாரகரன் தம்மை தாக்கி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்துவிட்டதாகவும் திவாகரன் கோஷ்டியிடமிருந்து தமக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் மன்னார்குடி நிர்வாண சாமியார் முத்துராஜா தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
நிர்வாண சாமியும் திவாகரனும்
மன்னார்குடி நிர்வாண சாமியார் முத்துராஜாவை அப்பகுதி மக்கள் சித்தராக கருதி வழிபட்டு வருகின்றனர். சசிகலா கோஷ்டியை அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்குவதற்கு முன்பாக முத்துராஜாவை திவாகரன் நேரில் சென்று பார்த்திருக்கிறார். திவாகரனுக்கு பிரச்சனைகள் வரும் என்று முத்துராஜா எச்சரித்ததாகவும் இதனால் கடுப்பான திவாகரன் அவரைத் தாக்கி மனநோயாளி எனக் கூறி சென்னை கீழ்ப்பாக்கத்தில் சேர்த்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
சசி கோஷ்டி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் முத்துராஜா மீண்டும் மன்னார்குடிக்கு திரும்பினார். இதுவரை மெளனம் காத்த முத்துராஜா இப்போது பாதுகாப்பு கோரி போலீஸிடம் மனு கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications