உ.பி. தேர்தல்: மாயாவதி சீட் தராததால் விஷம் குடித்த எம்.எல்.ஏ. ரவாத்
லக்னோ: உத்தர பிரதேச முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் தர மறுத்ததால் அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ராதே லால் ரவாத் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
உத்தர பிரதேசத்தில் வரும் 8ம் தேதி முதல் மார்ச் மாதம் 3ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தே தீர வேண்டும் என்று அம்மாநில முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி முனைப்பாக உள்ளார். அவர் தவிர காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாடி கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் ஹசன்கஞ்ச் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராதே லால் ரவாத் வரும் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டார். ஆனால் மாயாவதி சீட் தர மறுத்துவிட்டார். இதையடுத்து அவர் விஷம் குடித்தார். உடனே அவரை லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல் நிலை நன்றாக இருப்பதாக கூறப்படுகின்றது.
முன்னதாக ஆளுங் கட்சியைச் சேர்ந்த அவ்தேஷ் வர்மா ஊழல் செய்ததாக குற்றம் சாட்டி அவருக்கு சீட் தர மாயாவதி மறுத்தார். இதையடுத்து அவர் தான் கட்சிக்கு உண்மையாக இருப்பதாகத் தெரிவித்து ஊடகங்கள் முன்பு கண்ணீர் விட்டார். இதே போன்று ஜலீல் கான் என்பவருக்கும் சீட் மறுக்கப்பட்டது. தன் மீது பொய்க்குற்றம் சாட்டி சீட் மறுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.