எம்.எல்.ஏ. அலுவலகத்தை காலி செய்யும் அரசாணையை ரத்து செய்க: சென்னை ஐகோர்ட்டில் ஸ்டாலின் வழக்கு
சென்னை: எம்.எல்.ஏ. அலுவலகத்தை காலி செய்ய வழிவகை செய்யும் அரசாணையை ரத்து செய்யக் கோரி திமுக பொருளாளரும், கொளத்தூர் எம்.எல்.ஏ.வுமான மு.க. ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை வரும் 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கொளத்தூர் எம்.எல்.ஏ.வான மு.க.ஸ்டாலின் தனது எம்.எல்.ஏ. அலுவலகத்தை காலி செய்யும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
மறுவரையறை செய்யப்பட்டபோது புதிய தொகுதியாக கொளத்தூர் உருவானது. திமுக சார்பில் நானும், அதிமுக சார்பில் சென்னை மேயர் சைதை துரைசாமியும் போட்டியிட்டோம். நான் வெற்றி பெற்றேன்.
சென்னையில் உள்ள 16 தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கும் மாநகராட்சி மூலம் அலுவலகக் கட்டிடம் ஒதுக்கப்பட்டது. இதற்கான தீர்மானத்தை மாநகராட்சி நிறைவேற்றியுள்ளது. எனக்கு கொளத்தூர் ஜவஹர் நகரில் அலுவலகம் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 21ம் தேதி நடந்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில், என்னுடைய எம்.எல்.ஏ. அலுவலகத்தை காலி செய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தற்போதைய நிலைய தொடர உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. மு.க.ஸ்டாலின் தரப்பில் வழக்கறிஞர் என். ஜோதி ஆஜரானார். அப்போது வாதாடிய அட்வகேட் ஜெனரல் எம்.எல்.ஏ. அலுவலகத்தை ஸ்டாலின் காலி செய்ய பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து மனு தாக்கல் செய்யவில்லை என்றார்.
மேலும் அரசாணையை எதிர்த்தும் கூடுதல் மனு தாக்கல் செய்வதாக தெரிவித்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசியல் காரணங்களுக்காக இந்த அரசு திருத்தியுள்ளது. எம்.எல்.ஏ.க்கு அலுவலகம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் ஆணை பிறப்பிக்க அரசுக்கு உரிமை இல்லை. எனவே அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications