நல்ல எதிர்க்கட்சித் தலைவராகவே செயல்படவில்லை விஜயகாந்த்: ஜெ.சொன்னதில் என்ன தப்பு?- அன்புமணி

கோவை வந்த அவர் அங்கு செய்தயாளர்களிடம் பேசுகையில்,
எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் கடந்த 7 மாதமாக சிறப்பான முறையில் செயல்படவில்லை. சட்டசபைக்கு வெளியிலும் எந்த ஒரு மக்கள் நல பிரச்சினையிலும் அவர் ஈடுபடவில்லை.
தேமுதிக கட்சிக்கு என்று ஒரு கொள்கையோ, கோட்பாடோ இல்லை. எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது மிகவும் முக்கியமான பதவி. சட்டசபையில் விஜயகாந்த் குறித்து ஜெயலலிதா பேசியது சரிதான்.
தேமுதிகவும் திராவிட கட்சிதான். அந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம். சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கும்.
தமிழக அரசு ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 500 கோடி கடனில் மூழ்கி உள்ளது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கோடி கடனில் இருந்தது. இதற்கு இலவச திட்டங்கள்தான் காரணம். நான் மத்திய சுகாதார அமைச்சராக பதவி வகித்தபோது 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தேன். இதேபோல் தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தையும் செயல்படுத்தினேன். இதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு பலன் கிடைத்தது.
மருத்துவ காப்பீடு திட்டம் சரியாக செயல்படவில்லை. அரசு மருத்துவமனையில், தனியார் மருத்துவமனைக்கு இணையாக மருத்துவ சிகிச்சையை மேம்படுத்த வேண்டும்.
அரசு பணிகளில் தனியார் கல்லூரியில் படித்த நர்ஸ்களில் 50 சதவீதமும், அரசு கல்லூரியில் படித்த மாணவிகளில் 50 சதவீதமும் பணியில் சேர்க்க வேண்டும். இதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.
கடலூர் மாவட்டத்தில் தானே புயல் பாதிப்பை, அரசு சரிசெய்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. இன்னும் பல வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. புதுச்சேரியில் பயிர் இழப்பீட்டு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படுகிறது. தமிழக அரசு ரூ.7 ஆயிரம்தான் வழங்குகிறது. இதிலும் ஏற்றத்தாழ்வு உள்ளது என்றார் அன்புமணி.
இது ஜனநாயக விரோதமானது-ஜி.ராமகிருஷ்ணன்
விஜயகாந்த் மீதான நடவடிக்கை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில்,
ஆளுநர் உரை மீது விவாதம் நடக்கும்போது, எதிர்க்கட்சியை சார்ந்த உறுப்பினர்கள் அந்த உரையில் இருப்பதையும், இல்லாததையும் பற்றி விமர்சிக்க உரிமை உண்டு. ஆளும் கட்சியினர் அதற்கு தகுந்த பதில் தரவேண்டும்.
பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்னை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினால், உடனடியாக துறை சார்ந்த அமைச்சர்கள் எழுந்து நின்று அவர்களை பேசவிடுவது இல்லை. இது ஜனநாயக முறையல்ல.
பேரவையில் விலை உயர்வு குறித்து தேமுதிக உறுப்பினர் சந்திரகுமார் பேசினார். அதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் எழுந்து பேசினார். அப்போது நடந்த பிரச்னை தொடர்பாக, அவர்களை சபையை விட்டு வெளியே அனுப்பியதே போதுமானது. இதை உரிமை மீறல் குழு விசாரணைக்கு கொண்டு செல்லக்கூடாது.
கூட்டணிக் கட்சிகளால் அதிமுக ஆட்சியைப் பிடிக்கவில்லை; கூட்டணியே இல்லாமல் இருந்தால் கூட அதிமுக ஆட்சியைப் பிடித்திருக்கும் என்ற கருத்து சரியானது அல்ல.
திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள் அடங்கிய பலம் வாய்ந்த கூட்டணியை அதிமுக, தேமுதிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஒன்று சேர்ந்ததால்தான் தோற்கடிக்க முடிந்தது.
மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக ஆகியவை இத்தனை இடங்களைப் பிடித்திருக்கிறது என்றால், அதில் அதிமுகவின் பங்கும் உண்டு. அதே சமயம் அதிமுக ஆட்சி அமைத்தவுடன் நாங்கள் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று அறிவித்துவிட்டோம். அதேபோல தேமுதிகவும் அறிவித்திருந்தது.
தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தை 10 நாள் சஸ்பெண்ட் செய்திருப்பது ஜனநாயக விரோத நடவடிக்கையாகும். இதை கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுக உள்ளது. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு, பாசன நீர்ப் பங்கீட்டை தனியாருக்கு விட மத்திய அரசு முயற்சிப்பது உள்ளிட்ட கொள்கைகளை எதிர்த்தும், அதேபோல தமிழகத்தில் அதிமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும் போராட்டம் நடத்துவோம்.
கூட்டணி குறித்து பேச நேரம் இருக்கிறது. மக்களவைத் தேர்தல் வரும்போது அது குறித்து முடிவு செய்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications