திமுக உயர்நிலைக் கூட்டம்: பின் இருக்கையில் அமர்ந்த அழகிரி-கடைசி வரை பேசவே இல்லை!
சென்னை: சென்னையில் நேற்று நடந்த திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் மு.க.அழகிரி,முன் இருக்கையில் அமர மறுத்து பின்வரிசையில் உட்கார்ந்திருந்தார். மேலும் கூட்டத்தில் அவர் கடைசி வரை பேசவே இல்லையாம். அவரது சார்பில் அவரது கருத்துக்களை வீரபாண்டி ஆறுமுகம் பேசியதாக கூறப்படுகிறது.
திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நேற்று மாலை அண்ணா அறிவாலயம், முரசொலி அரங்கில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது.
கனிமொழி உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், விவாதங்கள் தொடர்பாக செய்தியாளர்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
திமுகவின் 14-வது உள்கட்சித் தேர்தல் தொடர்பாக பல சட்ட திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. இந்தத் திருத்தங்கள் பொதுக்குழுவில் தீர்மானமாக நிறைவேற்றுவதற்கு முன்பாக உயர்நிலைக் குழுவில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காகக் கூட்டப்பட்டது. ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் மூன்று முறைக்கு மேல் போட்டியிடக் கூடாது என்று புதிய சட்டதிருத்தம் செய்ய உள்ளனர்.
இந்த சட்டத் திருத்தத்திற்கு வீரபாண்டி ஆறுமுகம் உள்பட பலர் கடும் ஆட்சேபனை தெரிவித்தனராம். இதையடுத்து இதுகுறித்து இன்று நடைபெறும் பொதுக்குழுவில் விவாதித்து முடிவு செய்வோம் என்று கருணாநிதி குறுக்கிட்டுக் கூறினாராம்.
மாவட்டச் செயலாளர்களின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் மண்டலச் செயலாளர்கள் பதவியை உருவாக்குவது தொடர்பாக புதிய சட்டதிருத்தம் செய்ய இருந்தனர். இதற்கு எல்லாத் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் இந்தத் திட்டமும் கைவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
10 சட்டசபை தொகுதிகளுக்கு மேல் வரும் மாவட்டங்களை இரண்டு மாவட்டங்களாகப் பிரிப்பது தொடர்பாக உயர்நிலைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதற்கும் எதிர்ப்பு கிளம்பியதாம்.
திமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் மு.க.அழகிரி எதுவும் பேசவில்லையாம். மாறாக கடைசி வரை அமைதியாகவே இருந்தாராம். அவரை முன்வரிசையில் வந்து அமரச் சொன்னதற்கு மறுத்து விட்டாராம். கடைசி வரை கடைசி வரிசையில்தான் இருந்தாராம்.
இன்று பொதுக்குழு...
இன்று கருணாநிதி தலைமையில் பொதுக்குழு கூடுகிறது. அதில் கனிமொழி, ஸ்டாலினுக்கு உயர் பதவிகள் கொடுப்பது குறித்த முக்கிய விவாதமும், முடிவும் எடுக்கப்படவுள்ளது. மேலும் பல அதிரடி நடவடிக்கைகளும் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த முடிவுகளை அறிய ஒட்டுமொத்த திமுகவினரும் பெரும் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications