கூடங்குளம்: வெற்றி கிடைக்கும் வரை பயணம் தொடரும்: ஞானதேசிகன்
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் வெற்றி கிடைக்கும் வரை பயணம் தொடரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
பாளையங்கோட்டையில் நேற்று காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் அக்கட்சியின் மாநில தலைவர் ஞானதேசிகன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
உலகின் பல நாடுகளிலும் அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. தமிழகத்தில் கல்பாக்கத்தில் ஏற்கனவே அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. சுனாமி பாதிப்பின் போதும் இந்த அணுமின் நிலையம் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. இதில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் வேண்டுமா, வேண்டாமா என்பதை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தெளிவாகக் கூற வேண்டும். வேண்டாம் என்றால் அதற்கான காரணத்தைக் கூற வேண்டும். காங்கிரஸ் கட்சியை களங்கப்படுத்தி தேசிய நலனுக்கு எதிராக யாராவது செயல்பட்டால் ஒரு போதும் கட்சி ஏமாறாது. தற்போதைய பொதுக்கூட்டம் ஒரு ஆரம்பம்தான். வெற்றி கிடைக்கும் வரை, இலக்கை அடையும் வரை எங்களது பயணம் தொடரும் என்றார்.