சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் கவனத்துக்கு...!
சென்னை: சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் பிப்ரவரி 13ம் தேதிக்குள் விருப்ப மனுக்களை சமர்ப்பிக்கலாம் என்று திமுக தலைமைக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
சங்கரன்கோவில் தொகுதிக்கு ஏப்ரல் 21ம் தேதிக்குள் இடைத் தேர்தல் நடைபெறும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
அவர் அறிவிக்கும் முன்பே சங்கரன்கோவில் தொகுதியில் முத்துச்செல்வி போட்டியிடுவார் என்று அதிமுக அறிவித்து விட்டது. அதிமுகவினரும் தேர்தல் பணிகளில் மும்முரமாகியுள்ளனர்.
இந்த நிலையில், திமுகவும் தனது பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் பிப்ரவரி 13ம் தேதிக்குள் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இதற்காக கட்சியின் தலைமைக் கழகத்தில் விற்பனை செய்யப்படும் விண்ணப்பத்தை வாங்கிப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்று அது கூறியுள்ளது. விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ. 2,500 எனவும், ரூ, 500 முன்பணமாகச் செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் திமுக மேலிடம் தெரிவித்துள்ளது.
இத்தொகுதியில் கணிசமான வாக்குகளை வைத்துள்ள மதிமுகவும் பூர்வாங்கப் பணிகளை ஏற்கனவே தொடங்கி வேட்பாளரை மட்டும் அறிவிக்காமல் தீவிரமாக களப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவால் சவால் விடப்பட்டுள்ள தேமுதிக தரப்பிலும் களத்தில் குதிக்கத் தயாராகவே அக்கட்சியினர் உள்ளனர். இருப்பினும் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த், இடைத் தேர்தல் போட்டி குறித்து இதுவரை தெளிவாகப் பேசாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.