கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் மீது நில அபகரிப்பு முயற்சி புகார்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மகளான செல்வியின் மருமகன் ஜோதிமணி உள்பட 4 பேர் மீது சென்னை மதுரவாயல் அருகே உள்ள 28.77 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை பட்டாபிராம் தெற்கு மாடவீதியில் வசிக்கும் எம்.ஆர்.ரமணன் என்பவர் சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் கொடுத்துள்ள புகாரில்,
எனது தாய்வழி முப்பாட்டனாரின் தந்தை மறைந்த கே.சண்முக சுந்தர முதலியாருக்கு மதுரவாயல் கிராமத்தில் 28.77 ஏக்கர் பரப்பளவு உள்ள புஞ்சை நிலம் சொந்தமாக இருந்தது. 1875ம் ஆண்டு செட்டில்மெண்ட் அலுவலகத்தில் அதன் இயக்குனரால் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதற்கான சுற்றறிக்கையை இத்துடன் இணைத்திருக்கிறேன்.
இந்த நிலத்தை சண்முகசுந்தர முதலியாரோ அல்லது அவரது வாரிசுகளோ இதுவரை யாருக்கும் விற்பனை செய்யவில்லை.
இந் நிலையில் ஜோதிமணி (செல்வியின் மகள் எழிலரசியின் கணவர்), கு.க.செல்வம், புல்லட் பாஸ்கர் மற்றும் ஜோதி ஆகிய நால்வரும் கூட்டு சதி செய்து இந்த நிலத்தை அவர்கள் வாங்கியது போல போலி ஆவணங்களை தயார் செய்து இந்த நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள்.
எங்களுக்கு சொந்தமான இந்த நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் இந்த நால்வரையும் விசாரித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் இந்த நான்கு பேரிடமிருந்து எங்கள் குடும்பத்தாரின் உயிர் மற்றும் உடமைகளுக்கு ஆபத்து வர வாய்ப்பு இருப்பதால் எங்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு எம்.ஆர்.ரமணன் அந்த மனுவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications