களங்கம் கற்பிக்கும் மத்திய அமைச்சர் நாராயணசாமி மீது அவதூறு வழக்கு: உதயகுமார்
வள்ளியூர்: தங்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தி வரும் மத்திய அமைச்சர் நாராயணசாமி மீது அவதூறு வழக்குத் தொடரப் போவதாக கூடங்குளம் போராட்டக்குழுவின் தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் போராட்டக் குழுவினர் மீது குற்றசாட்டுகளையும் கூறினார். பொதுக் கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கூடங்குளம் பிரச்சனை குறித்து அவர் தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார். தங்கள் மீது கூறிய குற்றசாட்டுகளை போராட்டக் குழுவினர் மறுத்துள்ளதுடன் நாராயணசாமிக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
என்னை பற்றியும், கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டம் பற்றியும் தொடர்ந்து அவதூறான செய்திகளை பொது நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறி வருகிறார். உண்மைக்கு புறம்பாக என் மீது களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறார். எனவே, அவர் மீது அவதூறு வழக்கு தொடரப் போகிறோம். அதற்காக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.
அணுமின் நிலைய பிரச்சனை குறித்து ஆராய வல்லுனர் குழுவை நியமித்த தமிழக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டத்துக்கு மதிப்பளித்து முதல்வர் வல்லுனர் குழுவை நியமித்துள்ளார். அந்த குழுவில் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்களையும் இணைக்க வேணடும் என்று கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications