படகு மூலம் இலங்கைக்கு தப்ப முயன்ற மூவர் கைது
ராமேஸ்வரம் : படகு மூலம் இலங்கைக்கு திரும்பிச் செல்ல முயன்ற மூன்று இலங்கையரை போலீசார் கைது செய்துள்ளனர்..
ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் கியூ பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தோணியார் கோவில் கடற்கரை அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த சிலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மூவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் இலங்கைக்கு படகு மூலம் திரும்பிச் செல்லக் காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மூவரில் அப்துல்சலாம், சுசிந்தர் சாந்தன் இருவரும் இலங்கையில் இருந்து விமானம் மூலம் 30 கிலோ ஹெராயின் கடத்தியதாக கைது செய்து புழல் சிறையில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்தவர்கள் என்பது அம்பலமானது.
சிறையிலிருந்து விடுதலையான தங்களிடம் பாஸ்போர்ட் இல்லாததால் படகு மூலமாக இலங்கைக்குத் திரும்ப முடிவு செய்து, நாகர்கோவில் சித்திக் என்பவரிடம் ரூ1 லட்சம் கொடுத்ததாகவும் அவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.
இதையடுத்து மூவரையும் கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.