நரசிம்ம ராவ் பேத்தி என்று கூறி சென்னை தொழிலதிபரிடம் ரூ.1.30 கோடி சுருட்டிய பெண் கைது
சென்னை: முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் பேத்தி என்று கூறி சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரிடம் ரூ.1.30 கோடி பணம் வாங்கி மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டைச் சேர்ந்தவர் சமீர்ஷா. தொழில் அதிபர். அவர் மத்திய அரசு டெண்டர்கள் எடுத்து பல்வேறு பணிகள் செய்து வருகிறார். அவர் கடந்த 2009ம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
ஹைதராபாத்தைச் சேர்ந்த சூரியகுமாரி (42) என்ற பெண், நண்பர் ஒருவர் மூலமாக எனக்கு அறிமுகமானார். முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் பேத்தி என்று அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். மத்திய அரசில் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் பலரை எனக்கு நன்கு தெரியும். மத்திய அரசின் டெண்டர்களை நான் வாங்கித் தருகிறேன் என்று கூறினார். இதை நம்பி ரூ.1 கோடியே 30 லட்சத்தை அவரிடம் நான் கொடுத்தேன்.
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து இந்த பண பரிமாற்றம் நடைபெற்றது. ஆனால் சூரியகுமாரி டெண்டர் வாங்கி தராமல் என்னை ஏமாற்றிவிட்டார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே தலைமறைவான சூரியகுமாரியைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக அவர் பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் இருந்த நிலையில் அவரை சென்னை கொண்டு வர அஸ்ஸாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வாரண்டு பெறப்பட்டது.
இதையடுத்து ரயில் மூலம் சூரியகுமாரி இன்று காலை சென்னை கொண்டு வரப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கவிருக்கின்றனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த சூரியகுமாரிக்கு அங்கு ஒரு வீடு உள்ளது. மேலும் டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவர் வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டாரா? அவருக்குப் பின் மத்திய அரசு அதிகாரிகள் யாராவது உள்ளார்களா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலீஸ் விசாரணையில் சூரியகுமாரி பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு,
சூரியகுமாரிக்கு பத்து வயது இருக்கையில் அவரது தந்தை சிதபதிராவ் இறந்துவிட்டார். இதையடுத்து அவர் ஹைதரபாத்தில் இருந்து டெல்லிக்கு சென்றார். முதலில் குடிசைப்பகுதியில் குடியேறினார். அனைவருடனும் நன்றாகப் பழகியுள்ளார். படிப்பறிவில்லாத அவர் பலமொழிகளைக் கற்றுக் கொண்டார். பின்னர் தான் வசித்த பகுதியிலேயே வீடு ஒன்றை விலைக்கு வாங்கினார்.
பிறகு டெல்லியில் இருந்து அஸ்ஸாமில் உள்ள கவுகாத்திக்கு சென்றார். அங்குள்ள புகழ் பெற்ற காமாக்யா கோவில் அருகே தங்கி பூஜைகள் செய்து சாமியாராக இருந்தார். அதன் மூலம் அவருக்கு நல்ல வருமானம் வந்துள்ளது. இன்றைய விசாரணையின்போதும் நரசிம்ம ராவ் தனக்கு தூரத்து உறவு என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு சமீர்ஷாவை சந்தித்தாகவும் அவரிடம் விமான நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிக்கான டெண்டர் வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கியதாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் சமீர்ஷா கூறுவது போல கோடிக்கணக்கில் அல்ல லட்சக் கணக்கில் தான் பணம் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் பெண்கள் அமைப்பு ஒன்றில் தான் நிர்வாகியாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவர் நரசிம்ம ராவின் பெயரை பயன்படுத்தி டெல்லி மற்றும் அஸ்ஸாமிலும் மோசடி செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications