சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: திராணியை நிரூபிக்க தேமுதிக ரகசிய ஆலோசனை

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு இடைத்தேர்தலில் போட்டியிடாமல் அதிமுகவிற்கு ஆதரவாக ஒதுங்கி இருப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெல்லையில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திலும் இடைத்தேர்தல் தொடர்பாக எந்த ஆலோசனையும் செய்யவில்லை. இதனால் இடைத்தேர்தலில் தேமுதிக ஒதுங்கி இருப்பது உறுதியானது.
இந்நிலையில் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கும் இடையே ஏற்பட்ட காரசார விவாதத்தின் போது திராணி இருந்தால் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டுப் பாருங்கள் என்று ஜெயலலிதா சவால் விட்டார். இதனால் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேமுதிகவிற்கு கவுரவ பிரச்னையாகிவிட்டது.
இதையடுத்து தேமுதிக மாநில தேர்தல் பிரிவு செயலாளரும், விருதுநகர் எம்.எல்.ஏ.வுமான பாண்டியராஜன் சங்கரன்கோவிலில் நிர்வாகிகளை சந்தித்து இடைத்தேர்தலில் போட்யிடுவது தொடர்பாக ரகசிய ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் சங்கரன்கோவில் தொகுதியில் தேமுதிக தனித்து போட்டியிடலாமா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடலாமா, போட்டியிட்டால் எதிர்கட்சிகளின் பிரசாரம் எப்படி இருக்கும், அவர்கள் பிரச்சாரத்தை எப்படி எதிர்கொள்வது, ஆளுங்கட்சிக்கு சாதகம் மற்றும் பாதகமான விஷயங்கள் எது, எது என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதில் தொகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், முன்னாள் நகர செயலாளர் மகேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட தொழிற்சங்க தலைவர் கர்னல் தேவதாஸ், மாவட்ட துணை செயலாளர் இன்பராஜ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் தனசேகர், திருவேங்கடம் பேரூராட்சி செயலாளர் சேர்மக்கனி, நகர துணை செயலாளர் குருசாமி உட்பட 10 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளனர். மனு கொடுத்தவர்களின் பொருளாதார, அரசியல் பின்னணி குறித்து அவர்களிடமே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
பாண்டியராஜன் விரைவில் கட்சியின் தலைவர் விஜயகாந்திடம் ரகசிய ஆலோசனைக் கூட்டத்தின் அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார். அதன் அடிப்படையில் இரண்டொரு நாட்களில் சங்கரன்கோவிலில் தேமுதிக தனித்து நிற்கிறதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுகிறதா என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னரே வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications