நீதிமன்ற உத்தரவின்பேரில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வெள்ளக்கோவில் சாமிநாதன்
தாராபுரம்: நில அபகரிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவர் சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நில அபகரிப்பு வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் திமுக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன். அவரது காவல் நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கே முடிந்தது. ஆனால் போலீசார் அதற்குள் காவலை நீட்டிக்காமல் மறுநாள் அதாவது நேற்று தான் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதற்கு சாமிநாதனின் வழக்கறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் தெரிவித்தனர்.
தாராபுரம் நீதிமன்ற நீதிபதி விடுமுறையில் சென்றிருப்பதால் காங்கயம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயலட்சுமி முன்னிலையில் சாமிநாதன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது வழக்கறிஞர் செல்வராஜ் மற்றும் வழக்கறிஞர்கள் 6ம் தேதி மாலை 5.30 மணிக்கு முன்பே காவலை நீட்டிப்பு செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது சட்டவிரோதமான செயல் என்றும், அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் வாதாடினார்கள்.
ஆனால் நீதிபதி அவர்களின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் சாமிநாதனின் காவலை வரும் 21ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவரது வழக்கறிஞர்கள் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் சாமிநாதனுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாகவும், சிகிச்சை பெற அவருக்கு அனுமதி அளிக்குமாறும் தெரிவி்ததிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கூறியதாவது,
கோவை மத்திய சிறை சூப்பிரண்டு அனுமதி பெற்று வெள்ளக்கோவில் சாமிநாதனை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயர் ரத்த அழுத்த பரிசோதனை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அங்கேயே 3 நாட்கள் தங்கி சிகிச்சை பெறலாம் என்றார்.
நீதிபதியின் உத்தரவின்படி போலீசார் சாமிநாதனை இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். இதற்கிடையே ஈரோடு நீதிமன்றத்தில் சாமிநாதன் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.