சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : 26 அமைச்சர்கள் நியமனம் – அரசுப் பணி தள்ளாட்டம்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணி பொறுப்பாளர்களாக, 26 அமைச்சர்களை நியமித்துள்ளதால், அரசுத் துறைப் பணிகள் பாதிக்கும் என கூறப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்பு பணியில் தொய்வு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல், அ.தி.மு.க.,வுக்கு கவுரவப் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. தேமுதிக உள்ளிட்ட எதிர்கட்சிகளிடம் சவால் விட்டுள்ளதால் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நிலையில் தேர்தல் பணிகளை மிகத் தீவிரமாக அ.தி.மு.கவினர் மேற்கொண்டுள்ளனர்.
அமைச்சர்கள் குழு
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே, வேட்பாளரை அறிவித்து தேர்தல் வேலைகளை மிக வேகமாக செய்து வரும் நிலையில், கட்சியின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக, 26 அமைச்சர்கள், மூன்று எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 34 பேர் கொண்ட குழுவை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தேர்தல் பணிக் குழு பொறுப்பாளர்கள், தேர்தல் முடியும் வரை சங்கரன்கோவில் தொகுதியிலேயே இருந்து, தேர்தல் வேலைகளை கவனிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முடங்கும் அரசு இயந்திரம்
இதனால் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிக்கு அமைச்சர்கள் சென்று விடும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் தலைமை செயலகத்தில் துறை ரீதியான பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இரண்டு மாதங்கள் வரை, துறைவாரியாக கூட்டங்கள் நடத்துவது, பணிகளை ஆய்வு செய்வது போன்றவை அமைச்சர்கள் இல்லாமல் பாதிக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க அமைச்சருக்காக காத்திருக்கும் நிலை ஏற்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கும் பட்ஜெட் பணிகள்
2012 – 2013 ம் நிதி ஆண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட் மார்ச் மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், பட்ஜெட் தயாரிப்புக்கான வேலைகள் தீவிரமாக நடைபெறும். இதில், அந்தத் துறை அமைச்சர்களின் பங்களிப்பு முக்கியமானது. இந்நிலையில், தேர்தல் பணிகளுக்கு அமைச்சர்கள் சென்றுவிட்டால், பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் பாதிக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.
தேர்தல் தேதி இன்னும் அறிவிக்காத நிலையில், தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எப்போது இருப்பர், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிக்கு எப்போது செல்வர் என்று கூட தெரியாத நிலை உருவாகிவிடும் என, அதிகாரிகள் மத்தியில் கூறப்படுகிறது.
இதற்கிடையே அமைச்சர்கள் பழனியப்பன், ஆனந்தன், மாதவரம் மூர்த்தி, முக்கூர் சுப்ரமணியன், முகமது ஜான், ஜெயபால் ஆறு பேரும், கட்சியின் முக்கியப் பணியில் தாங்களை ஓரம் கட்டிவிட்டார்களோ என்ற கலக்கத்தில் இருப்பதாகக் கூறுகின்றனர். இதனால், தேர்தல் பணியில் இவர்களே தங்களை ஈடுபடுத்திக் கொள்ள உள்ளதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications