திருச்செந்தூரில் மீனவர்களிடையே மோதல்: 71 பேர் மீது வழக்கு, 24 பேர் கைது
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் மீனவர்கள் மோதல் தொடர்பாக 71 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து திருச்செந்தூர் அமலிகரையைச் சேர்ந்த ஒரு தரப்பு மீனவர்கள் கடந்த 1ம் தேதி வேலை நிறுத்ததில் ஈடுபட முடிவு செய்தனர். ஆனால் ஊர் நலக்கமிட்டி சார்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. ஊர் அறிவுறுத்தலையும் மீறி கனிஸ்டன் தலைமையிலான மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்து இடிந்தகரையில் நடைபெறும் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து ஊர் நலக்கமிட்டி நிர்வாகிகள் வேலை நிறுத்தம் செய்த கனிஸ்டன் தரப்பு மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்கு செல்லக் கூடாது என்று அறிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஊர் நலக்கமிட்டி பொருளாளர் ஜெஸ்வர் மீனவர்கள் சிலர் தாக்கியதாக கூறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
இந்நிலையில் நேற்று ஊர் கமிட்டியைச் சேர்ந்த ஜெகஜோதி என்பவருக்கும், கனிஸ்டன் தரப்பைச் சேர்ந்த சந்திரன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு இரு தரப்பினர் இடையேயான மோதலாக வெடித்தது. ஒருவரை ஒருவர் கைகளாலும், கற்களை வீசியும் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த எஸ்பி ராஜேந்திரன், டி.எஸ்.பி.க்கள் ராஜகோபால், ஞானசேகரன், இன்ஸ்பெக்டர்கள் இசக்கி, பிராதபன், பார்த்தீபன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 71 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 24 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஊர் நலக்கமிட்டியை சேர்ந்த மில்டன், வில்டன், சுதேசன், தினேஷ்குமார், உதயன், கிறிஸ்டோ, மிக்கேல், கிறிஸ்துராஜன், ஜேம்ஸ், ஜேம்ஸ் யூஜீன், செல்வராஜ் பெல்சன் ஆகியோர் அடக்கம்.