ஜீப், வேன் நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலிq
குமரி: குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் ஜீப் ஒன்று வேனுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
குமரி மாவட்டம் ஆலூரைச் சேர்ந்தவர் மனோகரன். அவர் தனது மனைவி, குழந்தைகள் உள்பட 9 பேருடன் தூத்துக்குடியில் நடைபெற உள்ள உறவினர் திருமணத்திற்கு ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் வாகனம் ஆரல்வாய்மொழி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வேனுடன் எதிர்பாராவிதமாக மோதியது. இதில் மனோகரன், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகள்கள் ரமா மற்றும் ரதீஷா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்ற 5 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஜீப் மீது மோதிய வேன் முன் பக்கம் மட்டும் சேதம் அடைந்தது. அதில் இருந்த மாணவிகள் அனைவரும் காயமின்றி தப்பினர். சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த ஆரல்வாய்மொழி போலீசார் வேன் டிரைவர் கோட்டாரைச் சேர்ந்த ராஜனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான ரதீஷா கட்டிமாங்கோட்டில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். ரமா 3ம் வகுப்பு படித்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் கட்டிமாங்கோடு, ஆரல்வாய்மொழி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பேருந்து, சரக்கு வாகனம் மோதல்-4 பேர் பலி:
சங்கரன்கோவில் திருவேங்கடம் அருகே அரசு பேருந்து ஒன்று விவசாயப் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வாகனத்துடன் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயகினர்.
அரசுப் பேருந்து ஒன்று மதுரையிலிருந்து சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திருவேங்கடத்தை கடந்து கொண்டிருந்தபோது விவசாயப் பணியாளர்களை (பெண்கள்) ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வாகனம் மீது எதிர்பாராவிதமாக மோதியது. இதில் சரக்கு வாகனத்தில் இருந்த 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர், 18 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக பாளை ஐகிரவுண்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மற்றவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications