பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலா ஆஜர்!-18ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு!

வழக்கமாக முதல்வர் ஜெயலலிதாவுடன் வரும் அவர் இந்த முறை தனியாக வந்து ஆஜரானார். அதே போல இந்த வழக்கில் இளவரசியும் தனியே வந்து ஆஜரானார்.
கடந்த பல ஆண்டுகளாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா, அவரது முன்னாள் தோழி சசிகலா, சசியின் அண்ணி இளவரசி, முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நிலுவை + இழுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நேரில் ஆஜராகி 4 நாட்கள் வாக்குமூலம் அளித்தார். அப்போது இந்த சொத்துக்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் தற்போது அத்தனை புகார்களும் சசிகலா உள்ளிட்டோர் மீது திரும்பியுள்ளது. பெங்களூர் விசாரணைக்குப் பின்னர்தான் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே பெரும் பிரளயம் ஏற்பட்டு பிரிந்தனர். சசிகலா குடும்பமே கூண்டோடு நீக்கப்பட்டது
இந்த நிலையில் இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலா ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் இன்று ஆஜரானார்.
இதற்கிடையில் நீதிமன்றத்தில் தன்னிடம் தமிழில் கேள்விகள் கேட்டு பதிவு செய்ய வேண்டும் என சசிகலா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடியாகி விட்டது. இருப்பினும் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சசிகலா அப்பீல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால், இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலாவிடம் விசாரணை நடக்கவில்லை.
மீண்டும் வரும் 18ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதாவை விட்டு சசிகலா பிரிந்த பின்னர் சென்னையிலேயே ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார்.
வழக்கமாக ஜெயலலிதாவுடன் தனி விமானத்தில் பெங்களூர் வரும் சசிகலா, இந்தமுறை சென்னையிலிருந்து காரில் வந்தார். அவருடன் எந்த கூட்டமும் வரவில்லை. நீதிமன்றத்தில் இளவரசியும், சசிகலாவும் பேசிக்கொண்டிருந்தனர்.
சசிகலா குடும்பம் துரத்தப்பட்டுவிட்டாலும், இளவரசி இன்னும் முதல்வரின் போயஸ் கார்டன் இல்லத்தில் தான் தொடர்ந்து தங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications