சங்கரன் கோயில் இடைத் தேர்தல்: மதிமுக தனித்துப் போட்டி - வைகோ அறிவிப்பு!

ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணாநகர் விஜயசேஷ மகாலில் நடந்தது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.
கட்சி நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், "தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக ம.தி.மு.க.வை மக்கள் மன்றத்தில் முன்னெடுத்துச் செல்வது என்றும் சங்கரன் கோவில் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுவது," என்று வைகோ அறிவித்தார். பொதுக்குழுவில் இது தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.
மதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
*முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மத்திய அரசு கேரளாவுக்கு சாதகமாக நடக்கக்கூடாது. அணையை பாதுகாத்து நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளை தேசிய உடமை ஆக்க வேண்டும். அதற்கான சட்டத்தை பாராளு மன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
*தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் உதவி வழங்க வேண்டும். தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
*மின்சார நிலமை முன்பு இருந்ததைவிட மோசமாகி உள்ளது. இந்த மின்வெட்டுக்கு பொதுக்குழு கண்டனம் தெரிவிக்கிறது. மின் கட்டணத்தை எந்த காரணத்தை கொண்டும் உயர்த்தக்கூடாது.
*அமராவதி, பவானி ஆற்றுநீரை தடுக்கும் விதத்தில் கேரள அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
*ஒரு டன் கரும்புக்கு ரூ.3 ஆயிரமும், ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
*தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
*திருப்பூர் சாயக்கழிவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
*ஆசிரியர் பணியிடங்களை பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும்.
*மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
*பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*தமிழக அரசு ஒப்பந்தப் பணிகளில் மின் ஆளுமை முறையை பின்பற்ற வேண்டும்.
*படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்.
*சமச்சீர் கல்வியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
*அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றக்கூடாது. கோட்டூர்புரத்திலேயே தொடர்ந்து இயங்க வேண்டும்.
*தமிழ்நாட்டில் ஊழலை அகற்றும் வகையில் லோக் ஆயுக்தா (ஊழல் விசாரணை மன்றம்) அமைக்க வேண்டும்.
*விஷவாயு விபத்துக்கு காரணமான டவ் கெமிக்கல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்யாவிட்டால், இந்தியா ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க வேண்டும்.
*கூடங்குளம் அணு மின்நிலையத்தை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத்தண்டனையை குறைக்க தமிழக அரசு அதிகார உரிமையை பயன்படுத்த வேண்டும்.
*இலங்கை தமிழர் பிரச்சினையில் சிங்கள அரசுக்கு மத்திய அரசு உடந்தையாக இருக்கக் கூடாது. இலங்கையில் தமிழர்களிடம் ஐ.நா.சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications