பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்க வேண்டும் – சீமான்!
சென்னை : சந்தேகத்தின் பேரில் பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்க தமிழக அரசு உத்தரவிடவேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனே விடுவிக்க தமிழக அரசு உத்தரவிடவேண்டும். தங்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று விசாரணைக்கு உட்படுத்தாமல் தொடர்ந்து அரசு கிடப்பில் போட்டுள்ளது என்றும், பிணைய விடுதலை உள்ளிட்ட சட்ட ரீதியான எந்த வழியையும் நாட விடாமல் தங்களை தமிழக காவல் துறையின் கியூ பிரிவு காவல் அதிகாரிகள் தடுக்கின்றனர் என்றும் கூறி, பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ளவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் தங்களை விடுதலை செய்து மற்ற முகாம்களில் உள்ள தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 10 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலமுறை போராடியும் அவர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். இதனால் மீண்டும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, தமிழக அரசு அவர்களின் நியாயமான, சட்டப்பூர்வமான கோரிக்கையை மனிதாபிமானத்தோடு பரிசீலித்து அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்," என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications